இலங்கை

அதீத போதைப் பாவனையால் யாழ். இளைஞனுக்கு நேர்ந்த துயரம்…!

Published

on

அதிக போதைப்பொருள் பாவனை காரணமாக யாழ்ப்பாணத்தைச் (Jaffna) சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திடீர் சுகவீனமுற்ற நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் நேற்றைய தினம் (02) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 29 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இளைஞனின் உடற்கூற்று பரிசோதனையில் அதீதபோதை பாவனை காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, இளைஞன் சிறு குற்ற செயல்களில் ஈடுபட்ட நிலையில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்ததையடுத்து ஓரிரு நாட்களுக்கு முன்னரே விடுவிக்கப்பட்டவர் என்றும், சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் நண்பர்களுடன் இணைந்து போதையை நுகர்ந்த நிலையிலையே, அதீத போதை காரணமாக சுகவீனமேற்பட்டது என காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் யாழ். காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், உயிரிழந்த இளைஞனுடன் சம்பவ தினத்தன்று போதையை நுகர்ந்த ஏனையவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Exit mobile version