இலங்கை

ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் : ஆளுநர் விடுத்துள்ள கோரிக்கை

Published

on

ரஷ்ய இராணுவத்தில் (Russia Army) இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் தமிழ் இளைஞர்களை மீட்டுத்தருமாறு அவர்களது பெற்றோர்கள் முன்வைத்த கோரிக்கைகளை புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பினரிடம் வடக்கு ஆளுநர் கையளித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் (N. Vethanayagan), புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (ஐ.ஓ.எம்.)  இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிக்குழு தலைவர் கிறிஸ்டின் பார்ஸோவுக்கும் (Kristin B. Parco) இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்று (30) இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது, கிறிஸ்டின் பார்ஸோ, தான் முதல் தடவையாக யாழ்ப்பாணம் வந்துள்ளதாகவும், வடக்கு மாகாணத்தின் நிலைமைகள் தொடர்பில் அறிவது தனது பயணத்தின் நோக்கம் எனவும் ஆளுநருக்குத் தெரியப்படுத்தினார்.

இதேவேளை ஆளுநர் இங்கு தெரிவித்ததாவது,“தற்போதும் யாழ். மாவட்டத்தில் மீளக்குடியமர்ந்த மக்களின் தேவைப்பாடுகள் அதிகளவில் இருப்பதனால் அதற்கான உதவிகள் தேவைப்படுகின்றன.

குறிப்பாக மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடுதலான உதவி தேவைப்படுகின்றது.

இளையோருக்கான வேலை வாய்ப்பு பெரும் சவாலாக இருக்கிறது. கடந்த காலங்களில் இயங்கிய தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கின்றமை இதற்குக் காரணம். வேலை வாய்ப்பு இன்மையால், இளையோர் உயிர்கொல்லி போதைப்பாவனைக்கு அடிமையாகும் நிலைமையும் அதிகரித்துச் செல்கின்றது.

முதலீடுகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்து, இதன் ஊடாக வேலை வாய்ப்புக்களை அதிகரிக்க எதிர்பார்கிறோம். வடக்கின் பல்வேறு தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்கு ஐ.ஓ.எம்மிடமிருந்து உதவிகளை எதிர்பார்க்கிறோம்.” என தெரிவித்தார்.

அத்துடன் ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் தமிழ் இளைஞர்களை மீட்டுத்தருமாறு அவர்களது பெற்றோர்கள் முன்வைத்த கோரிக்கைகளையும் ஆளுநர் ஐ.ஓ.எம்மிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version