இலங்கை

இலங்கையின் பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஆதரவை அறிவித்துள்ள பிரித்தானியா

Published

on

இலங்கை அதிகாரிகள் விரைவில் பயங்கரவாத அச்சுறுத்தலை நிவர்த்தி செய்வார்கள் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ள இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம், இலங்கை அரசாங்கத்திற்கு அதன் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

 

இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தாம் அரசாங்கத்திற்கு முழு ஆதரவை வழங்குவதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பேட்ரிக் நிகழ்வு ஒன்றின்போது தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்கா விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, இலங்கைக்கான தனது பயண ஆலோசனையை ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகார அலுவலகம் புதுப்பித்துள்ளது.

 

இலங்கையில் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த முயல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

 

விருந்தகங்கள், சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் போன்ற வெளிநாட்டவர்கள் அடிக்கடி செல்லும் இடங்கள் உட்பட கண்மூடித்தனமாக தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று அந்த ஆலோசனையில் கூறப்பட்டுள்ளது.

 

எனினும் இலங்கையின் சுற்றுலாத் துறையில் உள்ள சிலரால், தொழில்துறையை பாதிக்கும் வகையில் நிலைமை மிகைப்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதையும் பேட்ரிக் ஒப்புக்கொண்டார்.

 

இந்தநிலையில் அச்சுறுத்தல் தீர்க்கப்பட்டவுடன் ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகார அலுவலகம் ஆலோசனையை மறுபரிசீலனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

 

2022 ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக அமைதியின்மையைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இலங்கைக்கான கடும் பயண ஆலோசனையை பிரித்தானியா கடைப்பிடித்தபோதும். அந்த நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Exit mobile version