இலங்கை

பிரதமரின் படத்தை அனுமதியின்றிப் பயன்படுத்தத் தடை: வெளியாகியுள்ள அறிவிப்பு

Published

on

பிரதமரின் படத்தை அனுமதியின்றிப் பயன்படுத்தத் தடை: வெளியாகியுள்ள அறிவிப்பு

அரச நிறுவனங்களின் ஊடாக நடத்தப்படும் வெவ்வேறு நிகழ்வுகள் மற்றும் வேலைத்திட்டங்களின் போது பிரதமர் ஹரினி அமரசூரியவின் (Harini Amarasuriya ) படத்தைப் பயன்படுத்துவதற்கு அனுமதி பெறப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவுறுத்தல் பிரதமரின் செயலாளர் பிரதீப் யசரத்வின் கையெழுத்துடன் சகல அரச நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மையில் பல்வேறு நிகழ்வுகளுக்காக பெயர்ப் பலகைகள் மற்றும் விசேட நினைவு சஞ்சிகைகளுக்கு ஜனாதிபதியின் புகைப்படங்கள் மற்றும் வாழ்த்து செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தின் எழுத்துமூல அனுமதியை அனைத்து அரச நிறுவனங்களும் பெறுமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாரநாயக்க அறிவுறுத்தியிருந்தார்.

குறித்த விடயத்தினை ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்திருந்தது.

மேலும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake ) மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோர் ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையை தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்துவதை தவிர்க்க தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version