இலங்கை

புதிய கூட்டணிக்கு தலைவராகிறார் ரணில்

Published

on

புதிய கூட்டணிக்கு தலைவராகிறார் ரணில்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செயற்படுவார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“புதிய கூட்டணியை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சியில் உள்ள அரசியல் கட்சிகள் பல்வேறு கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றன.

இந்தநிலையில், பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த நிபந்தனைகளினால், ஐக்கிய தேசியக் கட்சிக்கும், சமகி ஜன பலவேகவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முறிவடைந்துள்ளன” என்றார்.

மேலும், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியும், சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தியும் இணைவதினை ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் குழப்புவதாக குற்றச்சாட்டுக்கள் வெளியிடப்பட்டிருந்தன.

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட தலைவர் ஒருவர் இந்தப் பேச்சுவார்த்தைகளில் இணைந்து கொண்டதன் பின்னரே இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தலைமையிலான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்டத் தலைவர் ஒருவர் பேச்சுவார்த்தைகளில் இணைந்து கொண்டதன் பின்னர் முரண்பாடு வெளியாகியதாகவும் கூறப்படுகிறது.

Exit mobile version