இலங்கை

இனப்பிரச்சினைக்கு தீர்வு : அநுர அரசு வெளியிட்ட அறிவிப்பு

Published

on

இனப்பிரச்சினைக்கு தீர்வு : அநுர அரசு வெளியிட்ட அறிவிப்பு

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் பின்னர் அமையவுள்ள புதிய நாடாளுமன்றத்தில் புதிய அரசமைப்பை உருவாக்குவதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் (vijitha herath) தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (anura kumara dissanayake) தலைமையிலான அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதன்போது, செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் மூலம் புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அரசை அமைப்பதற்காக நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலின் ஊடாகவே அரசு அமைக்கப்படும்.

எம்முடைய விஞ்ஞாபனத்துக்கு அமைய இனப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்க புதிய அரசமைப்பு உருவாக்கப்படும். அவ்வாறு உருவாக்கப்படும் அரசமைப்பு நாட்டு மக்களிடம் வழங்கப்பட்டு அவர்களின் கருத்துக்களுடன் கூடிய கொள்கை மற்றும் வேலைத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும். புதிய அரசு ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.

Exit mobile version