இலங்கை

முன்னாள் பெண் போராளியின் வாழ்வை மாற்றிய விடுதலைப்புலிகளின் தலைவரின் வளர்ப்பு!

Published

on

தனது வாழ்க்கையில் வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் முகங்கொடுத்து சாதிக்க துடிப்பதற்கு முக்கிய காரணம் விடுதலைப்புலிகளின் தலைவரின் வளர்ப்பு என்று முன்னாள் பெண் போராளி ஒருவர் கூறியுள்ளார்.

இவர் தனது சொந்த உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கு உதவுமாறு முகநூலில் வெளியான காணொளியிலே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அந்த காணொளியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,”நானும் எனது கணவரும் முன்னாள் போராளிகள். என்னுடைய கணவரை போரில் இழந்து தற்போது எனது இரு பிள்ளைகளுடனும் வாழ்க்கை நடத்துகின்றேன்.

நாங்கள் போராளிகளாக இருக்கும் போது எனது மகளுக்கு ஒன்றரை வயது இருக்கும். அவளை ஒரு வைத்தியராக்க வேண்டும் என்று என் கணவர் ஆசைப்பட்டார்.

போரின் இறுதி கட்டத்தில் பலர் போர்க்களத்திலிருந்து வெளியில் சென்றனர். அப்போது நாமும் சென்றுவிடலாம் என அவரை பல முறை அழைத்தேன் ஆனால் அவர், நான் கர்ப்பமாக இருந்ததால் என்னை மட்டும் போரிலிருந்து விடைபெற சொன்னார். அவர் இறுதிவரை போராடி வீரச்சாவடைந்தார்.

அதன்பின்னர் எனது இரு பிள்ளைகளுடன் நான் தனித்து வாழ்கிறேன்.

எங்களுடைய வாழ்வாராதத்திற்காக மிளகாய் தூள் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை ஆரம்பித்தேன்.

நான் பணியின் நிமித்தம் மற்றவர்களுக்கு தொலைப்பேசி எண்ணை கொடுக்கும் போது, சமூகத்தில் தனித்து வாழும் பெண்கள் அனுபவிக்கும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தேன்.

போர்க்களத்தில் எனக்கு கிடைத்த பயிற்சி, சக போராளிகள் கண் முன் மரணிப்பதை பார்த்து பார்த்து மனம் ரணமாகிவிட்டது. அந்த வலிகளை தாண்டி வேறு எதனாலும் எம்மை இன்னலுக்கு உள்ளாக்க முடியாது.

அந்த வலிகள் சுமந்த மனமும் விடுதலைப்புலிகளின் தலைவரின் வளர்ப்பும் எனக்கு வாழ்வதற்கான தைரியத்தை கொடுத்தது. இல்லையென்றால் நானும் சாதாரண பெண்களை போன்று என்றோ மனமுடைந்து வாழ்க்கையை வெறுத்திருப்பேன்.

எனது கணவரின் ஆசைப்படி என் மக்களை வைத்தியராக்க வேண்டும். அதை தவிர்த்து வெளியில் இருவருக்காவது வேலை வழங்கி உதவி செய்ய வேண்டும். வீடும் கடன் வாங்கி கட்டப்பட்டு வருகின்றது. நான் எனது உற்பத்தியை ஏற்றுமதி செய்யவும் விற்பனை செய்யவும் உங்களிடம் உதவி கேட்கிறேன். அதன் மூலம் என்னால் நான் நினைப்பவற்றை சாதிக்க முடியும்.”என கூறியுள்ளார்.

Exit mobile version