அரசியல்

தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளராக மாறியுள்ள ரணில் : சஜித் பகிரங்கம்

Published

on

தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளராக மாறியுள்ள ரணில் : சஜித் பகிரங்கம்

தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளராக ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மாறியுள்ளார் எனவும் இந்தக் கூட்டணி தன்னைப் பார்த்து அஞ்சுவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

கொலன்னாவயில் (Kolonnawa) நேற்று (07) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ” ரணில் மற்றும் அநுரவுக்கு (Anura Kumara Dissanayake ) இடையிலான புதிய ஒப்பந்த திரைப்படம் மக்கள் மத்தியில் இன்று திரையிடப்படுகிறது.

ரணிலுக்கு ஏதேனும் வழங்குவதாகத் தேசிய மக்கள் சக்தியினர் (NPP) ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளனரா என்ற கேள்வி எழுகிறது.

நாட்டு மக்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி சேவையாற்றும் என்ற அச்சம் ரணில் மற்றும் அநுர கூட்டணியில் காணப்படுகிறது. எனவே, இத்தகைய டீல் கலாச்சாரத்தை இல்லாதொழித்து, சிறந்த கொள்கையுடனான அரசியல் கலாச்சாரத்தை ஐக்கிய மக்கள் கூட்டணி உருவாக்கும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையினால் செல்வந்தர்கள் பாதுகாக்கப்பட்டுள்ள நிலையில் சாதாரண மக்கள் மீது வரிச்சுமை ஏற்றப்பட்டுள்ளது.

தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் நாம் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம். எனவே, எதிர்வரும் 21ஆம் திகதிக்குப் பின்னர், மக்களின் சுமைகளைக் குறைக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) புதிய உடன்படிக்கை எட்டப்படும்“ என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Exit mobile version