இலங்கை

எதிர்க்கட்சி உறுப்பினரின் உயிராபத்து தொடர்பில் ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு

Published

on

எதிர்க்கட்சி உறுப்பினரின் உயிராபத்து தொடர்பில் ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு

ஜனாதிபதியின் ஆலோசகர் மனுஷ நாணயக்கார சிறைச்சாலைக்குச் சென்று குற்றச் செயலில் ஈடுபட்ட சந்தேகநபருக்கு சலுகைகளை வழங்குவதாக உறுதியளித்ததன் பேரில் தமக்கு எதிராக வாக்குமூலம் பெற முயன்றதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“என்னுடைய உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் ரணில் விக்ரமசிங்க பொறுப்புக்கூற வேண்டுமென நான் வெளிப்படையாகக் கூறுகின்றேன்.

மூன்று நாட்களுக்கு முன்னர், முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் அஸ்லம் என்ற நபரும் வெலிக்கடை தடுப்புக்காவல் சிறைச்சாலைக்குச் சென்று ஐந்து வருடங்களுக்கு முன்னர் குற்றம் ஒன்றுத் தொடர்பிலான சந்தேகநபரை சந்தித்துள்ளனர்.

அவரை சந்தித்து கொழும்பில் வீடு ஒன்றை தருவதற்கு வாகனம் தருவதற்கு மற்றும் பணம் தருவதற்கும் வெளியில் வருவதற்கு பிணை பெற்றுக்கொடுப்பதற்கும் ஏற்பாடுகளை மேற்கொள்வதாக தெரிவித்து, எனக்கு எதிராக வாக்குமூலம் ஒன்றை தருமாறு கோரியுள்ளனர்.

முன்னாள் அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் என்னிடம் ஆதாரங்கள் உள்ளது. அந்த குற்றத்திற்கு, அவரை கைது செய்து ஐந்து வருடங்களாக தடுப்புக் காவலில் வைத்திருக்கின்றார்கள்.

அதனுடன் எனக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகநபரிடம் வாக்குமூலம் ஒன்று கோரப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் மனுஷ நாயணக்கார சந்தேகநபரை சந்தித்தமை குறித்து என்னிடம் சாட்சியும் காணப்படுகின்றது.

என்னை சிறையில் அடைக்க அல்லது எனது உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்த மனுஷ நாணயக்கார அமைச்சருக்கும், ரணில் விக்ரமசிங்கவிற்கும் நோக்கம் இருக்கிறதா என எனக்குத் தெரியவில்லை.

எனினும், ஒரு சூழ்ச்சி இடம்பெற்றுக் கொண்டிருப்பது எனக்குத் தெரியும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தன்னிடம் உள்ள ஆதாரங்களை உடனடியாக கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

Exit mobile version