இலங்கை

30 வருடகால யுத்தத்தை மூன்றே வருடங்களில் முடித்தோம்: மார்தட்டிக் கொள்கிறார் நாமல்

Published

on

30 வருடகால யுத்தத்தை மூன்றே வருடங்களில் முடித்தோம்: மார்தட்டிக் கொள்கிறார் நாமல்

நாட்டில் இடம்பெற்ற 30 வருடகால யுத்தத்தை மூன்றே வருடங்களில் முடிவுக்கு கொண்டுவந்தாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்கள் வாயிலாக நேற்றையதினம் (24) இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தங்களின் அரசின் கீழ் வடக்கு, கிழக்குக்குக் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படாது என்றும் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் மீண்டும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கூறுகையில், “நாட்டில் இடம்பெற்ற 30 வருடகால யுத்தத்தை 3 வருடங்களில் நாம் முடிவுக்குக் கொண்டு வந்தோம். போர் நிறுத்த உடன்படிக்கையை மேற்கொண்ட அரசும் எமது நாட்டில் உள்ளது. யுத்தம், வெற்றி கொள்ளப்படும் எனத் தெரிவித்த அரசும் நாட்டில் உள்ளது.

விசேடமாகக் காணி, காவல்துறை அதிகாரங்கள் உள்ளிட்ட அதிகார பரவலாக்கலை எந்தவொரு அரசும் முன்னெடுக்கவில்லை.

நாம் 13 பிளஸைக் கொண்டு வந்தோம், தேர்தலையும் நடத்தினோம். எட்டு ஜனாதிபதிகளும் காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை வழங்கவில்லை.

இந்தநிலையில் அடுத்துவரும், ஜனாதிபதியும் அதனைக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தாலும், அவராலும் அவற்றை வழங்க முடியாது.

எனவே, வடக்கு – கிழக்கு இணைவு, காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை எமது அரசும் வழங்காது.” என்றார்.

Exit mobile version