இலங்கை

ஜனாதிபதித் தேர்தலில் சஜித்திற்கு வாக்குகளை பெருவாரியாக பெற்றுக் கொடுப்போம்: திகாம்பரம் திட்டவட்டம்!

Published

on

ஜனாதிபதித் தேர்தலில் சஜித்திற்கு வாக்குகளை பெருவாரியாக பெற்றுக் கொடுப்போம்: திகாம்பரம் திட்டவட்டம்!

கண்டி (Kandy) மாவட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் வாக்குகளை எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு (Sajith Premadasa) பெருவாரியாக பெற்றுக்கொடுப்போம் என்று நுவரெலியா (Nuwara Eliya) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் (P. Thigambaram) தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியை சேர்ந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதான அமைப்பாளர்களை கினிகத்தேனையில் வைத்து நேற்று (17) சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு யார் துரோகம் செய்தாலும் அதனை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வருகின்ற தேர்தல்களில் துரோகம் செய்தவர்களுக்கு மக்கள் தகுந்த பாடத்தை காட்டுவார்கள்.

அத்தோடு, கண்டி மாவட்டத்தில் இருக்கின்ற எமது தமிழ் முற்போக்கு கூட்டணியின் வாக்காளர்கள் எந்தவகையிலும் தமது மன திடத்தை இழக்காமல் தொடர்ந்தும் அரசியல் தொழிற்சங்க செயற்பாடுகளில் ஈடுப்பட வேண்டும்.

அதற்கு நான் உட்பட தமிழ் முற்போக்கு கூட்டணியுடைய தலைவர்கள் உறுதுணையாக இருப்போம். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.

இவ்வாறான நிலையிலேயே கண்டி மாவட்ட தமிழ் மக்கள் நிச்சயமாக சஜித் பிரேமதாச அவர்களுக்கு வாக்களிக்க தயார் நிலையில் இருக்கின்றார்கள்.

ஆகவே, கண்டி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தமிழ் முற்போக்கு கூட்டணி தொடர்ச்சியான கூட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது. அதன் ஆரம்ப கட்டமாகவே அமைப்பாளர்களாகிய உங்களை சந்தித்து இருக்கின்றேன். அடுத்த கட்ட நடவடிக்கைகளில் நாங்கள் தீவிரமாக ஈடுப்பட இருக்கின்றோம்.

Exit mobile version