Connect with us

அரசியல்

மரணத்தின் பின்னும் மன்னிக்கத் தயார் இல்லாத தமிழ் மக்கள்

Published

on

24 669b9f90cb895

மரணத்தின் பின்னும் மன்னிக்கத் தயார் இல்லாத தமிழ் மக்கள்

உலக வரலாற்றில் அரசியல், இராணுவத் தலைவர்கள் உயிரோடு இருக்கும் பொழுதோ அல்லது அவர்களின் மரணத்தின் பின்னரோ அவர்களுடைய பட்டங்கள், பதவிகள், கேடயங்கள், பரிசு பொருட்கள் என்பவை தண்டனையாக பறிக்கப்படுவது நிகழ்ந்துகொண்டே இருக்கிறன.

இத்தகைய தண்டனை என்பது மக்களின் விருப்புக்கும் வெறுப்புக்கும் அப்பாற்பட்டு வரலாற்றில் நிகழ்ந்திருக்கிறது. எனினும் பெரும்பாலும் மக்களின் விருப்புக்கு உட்பட்டதாகவே இத்தகைய தண்டனைகள் நிகழ்ந்ததை வரலாறு எங்கிலும் காணமுடியும்.

அத்தகைய ஒரு தண்டனையாகவே தமிழரசு கட்சியின் மூத்த தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமாய் இருந்த இரா. சம்பந்தனின் மரணக்கிரியை மக்கள் புறக்கணித்ததை எடுத்துக்கொள்ள வேண்டும்.

உலக வரலாற்றில் மரணத்தின் பின் தண்டனையாக பதவி, பட்டங்கள் பறிக்கப்பட்டமைக்கு உதாரணமாக இங்கிலாந்தின் ஒலிவர் குரோம்வெல் , இத்தாலியின் முசோலினி போன்றவர்களை முதன்மை உதாரணங்களாக குறிப்பிடலாம். அவ்வாறே இலங்கையில் பீல் மாஷல் சரத் பொன்சேக்காவுக்கு பதவி, பட்டங்கள் பறிக்கப்பட்டமையும் அதன் பின்னர் பதவி பட்டங்கள் மீள கொடுக்கப்பட்டு மேலும் பட்டங்கள் கொடுக்கப்பட்டமையும் இங்கே கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.

ஒலிவர் குரொம்வெல் (Oliver Cromwell 25 ஏப்ரல் 1599 – 3 செப்டம்பர் 1658) இங்கிலாந்தின பெருந்திறமை வாய்ந்த எழுச்சியூட்டும் வீரம்மிகு முன்னணி இராணுவத் தலைவராக விளங்கியவர்.

இங்கிலாந்து உள்நாட்டுப் போரின்போது நாடாளுமன்ற படைகளுக்குத் தலைமை தாங்கிப் போரிட்டு இங்கிலாந்துக்கு வெற்றியை தேடிக் கொடுத்த செயல் வீரர். அத்தகையவர் பின்னாளில் முதலாம் சால்ஸ் மன்னனின் கொலையுடன் (30 ஜனவரி 1649) முடியாட்சியை வீழ்த்தி குடியாட்சியின் பெயரால் 19 மே 1649ல் ஆட்சியை கைப்பற்றினார்.

பின்னர் அவர் தன்னை மன்னனாக்கிப் புரட்சிக்குத் துரோகம் இழைத்தார். 1658 ல் அவர் இறந்ததன் பின்னர் மீண்டும் மன்னன் சால்ஸின் மகன் இரண்டாம் சால்ஸ் 1661இல் தம் வம்ச ஆட்சியை மீட்டெடுத்த பின்னர் 1662ல் குரோம்வெல் மீதான குற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் போது அவருடைய புதைக்கப்பட்ட உடல் தோண்டப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, டைபர்னில் உள்ள புகழ்பெற்ற தூக்கு மேடையில் அவருடைய எலும்புக்கூடு தூக்கிலிடப்பட்டது.

அத்தோடு நின்றுவிடாமல் அந்த எலும்புக்கூட்டின் தலை வெட்டப்பட்டது. மன்னரின் அதிகாரத்தைப் பற்றிய செய்தியை வெளியிடுவதற்கு , குரோம்வெல்லின் தலை வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தின் கூரையில் முப்பது ஆண்டுகள் காட்சிக்கு வைக்கப்பட்டது.

இங்கே மரணத்தின் பின்னும் ஒலிவர் குரொம்வெல்க்கு தண்டனை அளிக்கப்பட்டது மாத்திரமல்ல அவருடைய பட்டங்கள் பதவிகள் அனைத்தும் பறிக்கப்பட்ட ஒரு வரலாற்றை காணமுடிகிறது.

உலக வரலாற்றில் இத்தாலியின் பசிஸ்ட் முசோலினி என்று அழைக்கப்படும் பெனிட்டோ அமில்கார் அன்டிரியா முசோலினி (ஜுலை 29, 1883 – ஏப்ரல் 28, 1945) இரண்டாம் உலகப்போர் காலத்தில் இத்தாலி நாட்டுக்கு (1922–1943) தலைமை வகித்தவர்.

இத்தாலிய அரசை பாசிச அரசாக மாற்றி ஏதேச்சதிகார ஆட்சியை நடத்தியவர். அரச கட்டமைப்புகளையும், தனியார் நிறுவனங்களையும், ஊடகங்களையும், அறிஞர்களையும் திறமையானவர்களையும், தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வன்முறை, பரப்புரை, ஏகபோக அணுகுமுறை ஊடாக பாசிச அரசை உருவாக்கி பேணினார்.

ஹிட்லருடன் சேர்ந்து இரண்டாம் உலகப் போரின் போது நேச நாடுகளுக்கு எதிராகப் போரிட்டுத் தோற்றார். ஏப்ரல் 1945 இல், முசோலினி தம் மனைவி கிளாரா பெட்டாசியுடன் சுவிட்சர்லாந்துக்குத் தப்பியோட முற்படுகையில், இத்தாலியின் கோமோ ஆற்றின் அருகில் பார்ட்டிசான்களால் பிடிபட்டு பின் அவரும் அவர் மனைவியும் சுட்டு கொல்லப்பட்டனர்.

இவரது உடலை மிலானுக்கு எடுத்துச் சென்ற இத்தாலிய மக்கள் அங்குள்ள ஒரு எண்ணெய் விற்பனை நிலையத்தில் அவரது உடல் கயிற்றினால் பிணைக்கப்பட்டு மிகவும் அவமானகரமான முறையில் தலைகீழாகக் தொங்கவிடப்பட்டு பார்வைக்காக விட்டிருந்தார்கள்.

இங்கே ஒரு மக்கள் தலைவனுக்கு மக்கள் அளித்த தண்டனை மிகக் கொடூரமானது என்பதை இங்கு கவனத்திற் கொள்ளவேண்டும்.

அவ்வாறே இலங்கையின் இனப் பிரச்சனையின் உச்ச காலகட்டத்தில் பணியாற்றி தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு எதிராக இறுதிப் போரில் இலங்கைப் படைகளுக்கு தலைமை தாங்கிய ஜெனரல் சரத் பொன்சேக்கா பின்னாளில் ராஜபக்சக்களுக்கு எதிராக செயற்பட்டார்.

அரசதுரோகம் செய்தார் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளால் அவருடைய பட்டங்கள், பதவிகள், கேடயங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் கட்டை காற்சட்டையுடன் உணவுக்காக வரிசையில் உணவு தட்டை ஏந்தி நின்ற புகைப்படங்கள் வெளியாகி இருந்தமையும் தெரிந்ததே.

ஆனால் அதே பொன்சேக்காவிற்கு பின்னாளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் வெற்றி பெற்று நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்த ரணில் விக்ரமசிங்காவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவும், பௌத்த மகா சங்கமும் இணைந்து அவருக்கு பொது மன்னிப்பு வழங்கியதோடு, நாட்டை ஒன்றுபடுத்திய பெரும் யுத்தத்தில் படைகளுக்கு தலைமை தாங்கி இலங்கை அரசை பாதுகாத்தார் என்ற அடிப்படையில் அவருக்கு பீல் மாஷல் பட்டத்தையும் வழங்கியது.

இங்கே உலகளாவிய வரலாற்றில் ஒரு ராணுவ தளபதிக்கு பீல் மாஷல் பட்டம் வழங்குவது என்பது பெரும் தகுதிகளின் அடிப்படையில் வழங்கப்படும்.

அவ்வாறு வழங்கப்படுகின்ற போது அந்த இராணுவ தளபதி பல நாடுகளின் கூட்டுப்படைகளுக்கு தலைமை தாங்கினாலோ அல்லது எதிரி நாடு ஒன்றின் மீது படையெடுத்து வெற்றி பெற்றமைக்காகத்தான் வழங்கப்படும். இதுவே பொதுவான உலக இராணுவ நியதியாக இருந்து வந்துள்ளது.

ஆனால் இலங்கையில் தனது சொந்த நாட்டின் ஓர் இனத்தின் ஒன்றரை இலட்சம் மக்களை கொன்று குவித்து பெறப்பட்ட வெற்றிக்காக சரத் பொன்சேக்காவுக்கு பில் மாஷல் பட்டம் வழங்கப்பட்டது. இவ்வாறு ஒரு நாட்டினுடைய ராணுவ தளபதிக்கு பீல் மாஷல் பட்டம் வழங்குவது என்பது அந்த நாட்டினுடைய தேசிய கௌரவமாகவும், கீர்த்தியாகவும் கருதப்படும்.

அவ்வாறு வழங்குகின்ற பட்டத்துக்கு அந்த நாட்டினுடைய நாடாளுமன்றத்தின் அனைவரும் ஒப்புதல் அளிக்கின்ற அல்லது ஆதரவளிக்கின்ற பட்சத்திலேயே வழங்கப்படுவதுதான் உலக நியதியாகவும் இருந்திருக்கிறது.

இந்த அடிப்படையில் இலங்கையில் பீல்மாஷல் பட்டம் சரத் பொன்சேக்காவுக்கு வழங்கப்படுகின்றபோது இலங்கையின் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இரா சம்பந்தன் அவர்களே இருந்தார். சம்பந்தன் தலைமையில் இயங்கிய அதுவும் எதிர்க் கட்சி தலைமை என்ற அந்தஸ்தில் இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த பீல் மாஷல் பட்டம் வழங்குவதற்கு எதிராக எதையும் செய்யாமல் பெரிதும் ஆதரவாகச் சசெயற்பட்டது.

குறைந்தபட்ச எதிர்ப்பையாவது காட்டி நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறவில்லை என்பதன் மூலம் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒன்றரை இலட்சம் தமிழ் மக்களை பற்றி அவர்கள் எந்த கரிசனையும் இன்றி இருந்திருக்கிறார்கள்.

அது மாத்திரமல்ல தங்கள் சொந்த மக்களின் அழிவைப் பற்றி அவர்கள் எந்த கவலையும் அற்று இலங்கை இனவழிப்பு அரசாங்கத்துக்கு அனுசரணையாகவும், ஆதரவாகவும்; கூட்டுப் பங்காளிகளாகவும் இருந்தார்கள் என்றுதான் தமிழ் மக்களால் பார்க்கப்பட்டது.

தீர்வு தரப்போவதாகக் கூறி தமிழ் மக்களின் ஆதரவை வளங்கி அரசாங்கத்தை அமைக்கு காரணமான சம்பந்தன் தீர்வைப் பெறாதது மட்டுமல்ல அதற்கப்பால் இனப்படுகொலைத் தளபதிக்கு பீல்ட் மாஷல் பட்டம் வளங்க உறுதுணையாய் நின்றார். தமிழ் மக்களின் கடந்த நூறு ஆண்டு அரசியல் வரலாற்றில் ராமநாதன், பொன்னம்பலம், செல்வநாயகம், அமிர்தலிங்கம் இந்த அரசியல் தலைவர்களின் வரிசையில் கடந்த 20 ஆண்டுகள் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கிய மிதவாத தலைவர் என்ற அடிப்படையில் அவருக்கு என்றொரு பங்கும், பாத்திரமும், பொறுப்பும், வரலாற்று கடமையும் இருந்தது.

ஆனால் தனது மக்களுக்கு உரிய பொறுப்பையும் கடமையையும் செய்யத் தவறிய தலைவராகவே சம்பந்தன் இறக்கும்போது தமிழ் மக்களால் கருதப்பட்டார்.

அது மாத்திரமல்ல தான் தலைமை தாங்கி நிர்வாகித்த கட்சியின் சிதைவையும் உடைவையும் அவருடைய அந்திமக் காலத்தில் தன் கண்களால் பார்த்த வாறே அவர் மரணத்தையும் தழுவினார் என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும். இரா சம்பந்தன் அவர்களுடைய தலைமைத்துவம் என்பது தமிழ் மக்களுக்கு எந்த ஒரு வெற்றியையும் பெற்றுத் தரவில்லை.

அவர் வாழும்போதும் தோல்வியடைந்த தலைவராக அனைத்து சிங்களத் தலைவர்களாலும் ஏமாற்றப்பட்ட தலைவராக அனைத்து சிங்கள தலைவர்களிடமும் ஏமாந்த தலைவராக தமிழ் மக்களால் பார்க்கப்பட்டார் . இந்த நிலையில் அவர் தலைமை தாங்கிய கட்சி இரண்டாக உடைந்து சண்டையிடும் நிலைக்கு இவரே பொறுப்பானவர் என்ற கருத்தும் தமிழ் மக்களிடம் உண்டு.

இந்த நிலையிற்தான் அவருடைய மரணம் நிகழ்ந்தது. அவருடைய மரணம் நிகழ்ந்து பின்னர் இந்திய அரசியல் தரப்பினர் இரங்கல் செய்தி வெளியிடுகின்ற போது தமிழ் தேசிய மக்களின் தலைவர் என்று குறிப்பிட்டு இரங்கல் செய்தி வெளியிட்டு இருந்தனர்.

ஆனால் இவருடைய தமிழரசு கட்சியின் பேச்சாளர் தன்னுடைய குறிப்பில் தமிழ் சிறுபான்மை மக்களின் தலைவர் என்று குறிப்பிட்டதிலிருந்தே இவருடைய நிலைப்பாடு என்ன என்பதை மக்கள் தெளிவாக புரிந்துகொண்டிருந்தனர். அதேநேரத்தில் சம்பந்தன் அவருடைய மரணத்தை தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் புலம்பெயர் தேசங்களிலும் இருந்துமடிக்கணினி அவருக்கு எதிரான காட்டமான கருத்துக்களே வெளிவந்தன.

பொதுவாக தமிழர் பண்பாட்டில் ஒருவர் மரணம் அடைந்தால் அவருடைய மரணத்தின் பின்னர் அவருடைய நல்ல விடயங்களை மாத்திரமே பேசுகின்ற நினைவுபடுத்துகின்ற ஒரு பண்பு தமிழ் மக்களிடம் உண்டு.

ஒருவருடைய மரணத்தின் பின்னர் அவருடைய தவறான அல்லது பாதகமான எந்த ஒரு பண்பையும் தமிழ் மக்கள் பேசுவதில்லை.

மரணத்தின் பின் இறைவனடி சேர்ந்தார் காலமானார் என இழிவுபடுத்தாமல் மேன்மைப்படுத்துகின்ற பண்பையே கொண்டிருக்கின்றனர்.

இதுவே தமிழ் மக்களின் உயரிய விழுமியமாக இருந்து வருகின்றது. ஆனாலும் “உரைசார் பத்தினியை உயர்ந்தோர் ஏற்றுதலும், அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்ற சிலப்பதிகாரத்தின் சொல்லோவியத்தில் வருகின்ற அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகுவது மாத்திரமல்ல அரசியல் பிழைத்தோர்க்கு மரணமே தண்டனை மாத்திரமல்ல உயிரற்ற உடலுக்கும் தண்டனை வழங்கப்படும் என்பதை சம்பந்தரின் மரண ஊர்வலம் வழிகாட்டி நிற்கிறது.

இங்கே மரணம் அடைந்த சம்பந்தன் அவர்களை இகழ்வதோ தூற்றுவதோ இப்பந்தியின் நோக்கம் அல்ல. ஆனால் தமிழ் சமூகத்தின் நிலை என்ன என்பதை வெளிக்காட்டுவதே இப்பந்தியின் நோக்கமாகிறது. தமிழ் தலைவர்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதை எடுத்துக் கூறுவதே இதன் கருவாகிறது. மக்களின் மனங்களை வெல்லாதவர்கள் மக்கள் தலைவர்களாக முடியாது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகவும் அமைகிறது.

இந்த நிலையிற்தான் சம்பந்தனுடைய உடல் இறுதி அஞ்சலிக்காக கொழும்பிலிருந்து வவுவுனியா, யாழ்ப்பாணம், திருவோணமலை வரை மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போது அஞ்சலி செலுத்திய ஒட்டுமொத்த மக்களின் தொகை 3500-ஐ தாண்டவில்லை என்பதிலிருந்து மக்கள் இவருக்கு கொடுத்த கௌரவத்தையும் அல்லது முக்கியத்துவத்தை உணர முடிகிறது.

யாழ்ப்பாணத்திற்கு அவர் உடல் எடுத்துச் செல்லப்பட்டபோது காண்பிக்கப்பட்ட புகைப்படங்கள் ராணுவத்தினரால் காவி செல்லப்படும் காட்சி மக்களுக்கு பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தது என்பது உண்மைதான். அதனால்த்தான் என்னவோ அரசு தரப்பில் இருந்து சம்பந்தனுடைய இறுதிக்கிரியை அரச மரியாதையுடன் செய்வதற்கு அரசு தரப்பு கேட்டிருந்தும் சம்பந்தனுடைய குடும்பத்தினர் அதற்கு மறுத்துவிட்டனர் போலும்.

எனினும் இறுதி திரைகளின் போது திருகோணமலைக்கான போக்குவரத்திற்கு மாகாண ஆளுநர் விசேட போக்குவரத்து ஒழுங்கினை செய்திருந்தார் என்பதும் இங்கே முக்கியமானது.

அஞ்சலிக்காக உடல் யாழ் நகரத்த கூடாக செல்வநாயகம் மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது யாழ் நகரத்துக்குள் விளம்பர சேவையில் “மன்மதராசா மன்மத ராசா” என்ற குத்தாட்டப் பாடல் ஒளிபரப்பாகியது தற்செயலானதா? அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்பதும் கேள்விக்குரியாது.

அதே நேரத்தில் அவருடைய உடல் வைக்கப்பட்ட மண்டபத்தின் அதிலிருந்து பாடசாலைகளின் இரைச்சலானது மண்டபத்தில் இருந்தோருக்கு பெரும் கவனக் கலைப்பானாகவும் இருந்ததை பார்க்க முடிந்தது.

மேலும் அஞ்சலிக்காக வந்தவர்களில் பெரும்பான்மையினர் இலங்கை அரசாங்க இயந்திரத்தின் ஊழியர்களாக அதாவது அரச இயந்திரத்தின் உதிரிப் பாகங்களாக இருந்ததையே அவதானிக்க முடிந்துள்ளது.

அதுமட்டுமல்ல யாழ் நகரத்தில் இரண்டு இடங்களில் மாத்திரமே நினைவஞ்சலி பதாகைகள் கட்டப்பட்டிருந்தன என்பதையும் கருத்திற் கொள்ளவேண்டும் ஆனால் ஐந்து மாதங்களுக்கு முன்னர் மரணம் அடைந்த சாந்தனின் உடல் இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்தின் பட்டி தொட்டி எங்கும் நினைவஞ்சலி பதாகைகள் ஆயிரத்துக்கு மேல் கட்டப்பட்டதை கருத்தில் கொள்ள வேண்டும்.

இங்கே சாந்தனுக்கு அவ்வளவு தூரம் திரண்டு மக்கள் அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள். உலகின் பார்வையில் சாந்தன் ஒரு கொலை குற்றத்திற்காக தண்டனை பெற்ற மனிதர். ஆனால் சம்பந்தன் உலகின் பார்வையில் இலங்கைத் தமிழ் ராஜதந்திரி.

ஆனால் தமிழர் தேசத்தில் இந்த இருவரிலும் சாந்தனுக்கு கிடைத்த மிகப்பெரிய அனுதாபமும் அஞ்சலியில் ஒரு பத்து விகிதம்தானும் தமிழரசு கட்சியினுடைய மூத்த தலைவர் சம்பந்தனுக்கு கிடைக்கவில்லை என்றால் இங்கு ஏதோ தமிழ் மக்களின் விருப்புக்கு மாறாக சம்பந்தன் நடந்து கொண்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

தமிழ் மக்கள் தமிழரசு கட்சியின் செயற்பாடுகளை வெறுப்புடனையே பார்த்திருக்கிறார்கள் என்பதும், அதற்கு அவர்கள் எதிராக பேசாவிட்டாலும் தமது கோபத்தை பொருத்தமான நேரத்தில் பொருத்தமான விதத்தில் வெளிப்படுத்த தவற மாட்டார்கள்.

தமிழ் மக்களிடத்தில் நாட்டுவழக்கு கூற்று ஒன்று உண்டு அதை “வைச்சுச் செய்வது அல்லது வைச்சுச் சாதிப்பது” என்பார்கள். அதுதான் மரணத்தின் பின்னும் தமிழ் மக்கள் மன்னிக்க தயார் இல்லை என்ற செய்தி.

நேற்று நிகழ்ந்த சம்பந்தன் அவர்களுக்கான தமிழ் மக்களின் “வைச்சு செய்தல்” என்பது எஞ்சி இருக்கும் மிதவாத தமிழ் அரசியல் வாதிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது என்பதிற் சந்தேகமில்லை.

பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 20 July, 2024 அன்று இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

Advertisement

ஜோதிடம்

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்17 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசிபலன் : 07 செப்டம்பர் 2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் செப்டம்பர் 7, 2024, குரோதி வருடம் ஆவணி 22, சனிக் கிழமை, சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். மீனம் ராசியில் உள்ள பூரட்டாதி, உத்திரட்டாதி...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 06 செப்டம்பர் 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 06 செப்டம்பர் 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் செப்டம்பர் 06, 2024, குரோதி...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 05 செப்டம்பர் 2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் : 05 செப்டம்பர் 2024 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் செப்டம்பர் 05, 2024, குரோதி வருடம் ஆவணி 20, வியாழக்...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 4 செப்டம்பர் 2024 – Horoscope Today

இன்றைய ராசிபலன் : 4 செப்டம்பர் 2024 – Horoscope Today இன்றைய ராசிபலன் செப்டம்பர் 4, 2024, குரோதி வருடம் ஆவணி 19, புதன் கிழமை,...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 3 செப்டம்பர் 2024 – Horoscope Today

இன்றைய ராசிபலன் : 3 செப்டம்பர் 2024 – Horoscope Today இன்றைய ராசிபலன் செப்டம்பர் 3, 2024, குரோதி வருடம் ஆவணி 18, செவ்வாய்க் கிழமை,...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 2 செப்டம்பர் 2024 – Horoscope Today

இன்றைய ராசிபலன் : 2 செப்டம்பர் 2024 – Horoscope Today இன்றைய ராசிபலன் செப்டம்பர் 2, 2024, குரோதி வருடம் ஆவணி 17, திங்கட் கிழமை,...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் : 31 ஆகஸ்ட் 2024 – Horoscope Today

இன்றைய ராசிபலன் : 31 ஆகஸ்ட் 2024 – Horoscope Today இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 31, 2024, குரோதி வருடம் ஆவணி 15, சனிக் கிழமை,...