இலங்கை

இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியாவின் தலையீடு அவசியம்: தமிழர் தரப்பு கோரிக்கை

Published

on

இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியாவின் தலையீடு அவசியம்: தமிழர் தரப்பு கோரிக்கை

தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இந்தியாவினால் மட்டுமே தலையீடுகளைச் செய்ய முடியும் என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி விளக்கமளித்துள்ளது.

 

கொழும்பில் இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுடன் இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடலின் போதே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

இந்த ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள பிரதான வேட்பாளர்களிடம் நிபந்தனைகளை முன்வைத்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு சந்தோஷ் ஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இந்நிலையில் கோரிக்கைக்கு பதில் வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டணியினர்,

 

பெரும்பான்மை வாக்கு

தென்னிலங்கை வேட்பாளர்களால் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுகின்ற நிலைமைகளே எமக்கு காணப்படுகின்றன. அந்த வகையில் நாம் இம்முறை தமிழ் மக்களின் சார்ப்பில் ஒரு வேட்பாளரை களமிறக்கப்போகின்றோம். மூன்று பேர் தென்னிலங்கையில் போட்டியிடுகின்றபோது, பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுக்கொள்வது மிகவும் கடினமான விடயமாகும்.

அதனை தென்னிலங்கையில் களமிறங்குவதற்கு தயாராகவுள்ள ரணில், சஜித், அநுர ஆகியோர் புரிந்துகொண்டுள்ளார்கள்.

அதன் காரணத்தினாலேயே அவர்கள் தற்போது வடக்கு, கிழக்கு ஆகிய பகுதிகளுக்கு விஜயங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். ஆகவே அவர்களுக்கு தமிழ்த் தரப்பு நோக்கி தற்போது வருகை தரவேண்டிய நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

அநுரகுமார மாகாண சபைகள் பற்றிப் பேசினாலும் அவர்கள் மாகாண சபைக்கான அதிகாரங்கள் தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக தெரியவில்லை. அவர்கள்தான் வடக்கு, கிழக்கு பிரிக்கப்படுவதற்கு காரணமாக இருந்துள்ளனர்.

அவர்களை ஆதரிப்பது முரணான நிலைப்பாடாகவே காணப்படும்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு

அத்தோடு சஜித் பிரேமதாச இதுவரையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட தமிழ் மக்களின் விடயங்கள் சம்பந்தமாக கரிசனைகளைக் கொள்ளாதிருந்த நிலையில் தற்போது 13ஆவது திருத்தச்சட்டம் பற்றி கூறுகின்றார்.

அதிலும் காணி, பொலிஸ் அதிகாரங்கள் இல்லாத மாகாண சபை முறைமையை இலக்காக கொண்டுள்ளார். மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் செல்வதற்கு தயாரில்லை.

கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் சம்பந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வில்காணி, பொலிஸ் அதிகாரங்கள் அற்ற மாகாண சபை முறைமை நடைமுறையாக்கம் குறித்தே உரையாற்றியிருந்தார்.

ஆகவே மூன்று வேட்பாளர்களும் 13ஆவது திருத்தச் சட்டத்தினைக் கூட முழுமையாக முன்னெடுப்பதற்கு தயாரில்லாத நிலையில் தான் உள்ளார்கள். அவ்வாறான நிலையில் அவர்களுடன் பேச்சுக்களை முன்னெடுப்பதில் பயனில்லை.

அதேநேரம், அவர்களும் தென்னிலங்கையில் தங்களது வாக்குவங்கி சரிந்துவிடும் என்பதற்காக பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு தயாரில்லாத நிலைமையிலேயே உள்ளனர்.

மேலும், தென்னிலங்கை தலைவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு செல்வதாக இருந்தர் மூன்றாம் தரப்பின் தலையீட்டுடன் தான் பங்கேற்பது பொருத்தமானது. ஆனால் அதற்குரிய நிலைமைகளும் பூரணமான அளவில் சாதகமாக இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தியாவின் தலையீடு

ஆகவே மூன்று வேட்பாளர்களும் 13ஆவது திருத்தச் சட்டத்தினைக் கூட முழுமையாக முன்னெடுப்பதற்கு தயாரில்லாத நிலையில் தான் உள்ளார்கள். அவ்வாறான நிலையில் அவர்களுடன் பேச்சுக்களை முன்னெடுப்பதில் பயனில்லை.

தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இந்தியாவினால் மட்டுமே தலையீடுகளைச் செய்ய முடியும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.

இவ்வாறான சூழலில் இந்தியாவும் பல சந்தர்ப்பங்களில் இலங்கை அரசாங்கத்திடம் தமிழர்களின் தீர்வு விடயத்தில் கரிசனைகளை வெளிப்படுத்தியுள்ளபோதும் இலங்கை அரசாங்கம் நடைமுறையில் எதனையும் முன்னெடுத்ததாக இல்லை.

மேலும், தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவதன் ஊடாக தமிழ் மக்களின் பிரதிபலிப்புக்களை மையப்படுத்தி இலங்கை அரசாங்கத்திற்கு மேலதிக அழுத்தங்களை இந்தியாவினால் வழங்க முடியும். என தெரிவித்துள்ளனர்.

Exit mobile version