இலங்கை

யாழில் வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக குவியும் பெருந்தொகையான மக்கள்

Published

on

யாழில் வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக குவியும் பெருந்தொகையான மக்கள்

யாழ். (Jaffna) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக தென்மராட்சி மக்களால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமும் கடை அடைப்பு நடவடிக்கையும் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை தீர்த்து வைத்தியசாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க வேண்டும் என கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதேவேளை, பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனா சுகவீன விடுமுறையில் இருப்பதாகவும் இன்று வைத்தியசாலைக்கு சேவைக்கு செல்ல போவதில்லை எனவும் தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதுடன் மக்கள் அணிதிரண்டு அமைதியான வழியில் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அப்பகுதியில் பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு ஆதரவளித்து இன்று (08.07.2024) போராட்டம் முன்னெடுக்க தீர்மானித்திருந்த நிலையில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் பொலிஸாரின் நடவடிக்கைகள் காரணமாக நேற்ற இரவு 8 மணியளவிலேயே மேற்படி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

வைத்தியர் அர்ச்சுனாவிற்கான இடமாற்றக் கடிதத்தை இரவு வேளையில் வைத்து வழங்க முற்பட்டமை மற்றும் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டமையினால் சுமார் 400 பொதுமக்கள் ஒன்றுகூடி வைத்தியசாலை முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனால் பொலிஸார் குவிக்கப்பட்டு அவ்விடத்தில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த போராட்டத்துடன் தற்போது கடையடைப்பும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Exit mobile version