இலங்கை

கடற்றொழிலாளர் பிரச்சினையை தீர்ப்பதில் தமிழக அரசு மௌனம் : அமைச்சர் டக்ளஸ் குற்றச்சாட்டு

Published

on

கடற்றொழிலாளர் பிரச்சினையை தீர்ப்பதில் தமிழக அரசு மௌனம் : அமைச்சர் டக்ளஸ் குற்றச்சாட்டு

தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்திய மத்திய அரசால் மட்டும் கடற்றொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா(douglas devananda) தெரிவித்துள்ளார். குறிப்பாக இலங்கை தமிழ் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்தாலும் இன்னமும் தமிழக அரசு மௌனம் காத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் பொருளாதாரம் மற்றும் பல தசாப்தங்களாக புரையோடிப்போகும் கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர்(jaishankar), இலங்கைக்கான தனது சமீபத்திய விஜயத்தின் போது, ​​இந்த விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைக்காக தன்னை புதுடெல்லிக்கு அழைத்ததாக அவர் கூறினார்.

“புது டெல்லியில் உள்ள இந்திய அரசாங்கத்தால் மட்டும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. நான் தமிழகம் வர வேண்டும். இந்த விவகாரத்தில் தீர்வு காண மாநில அரசு தயாராக இல்லை. அவ்வாறு செய்ய ஆர்வமாக இருந்தால், சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலுக்கு செல்லும் இழுவை படகு உரிமையாளர்களின் கடற்றொழில் உரிமத்தை ரத்து செய்வதன் மூலம் இதை எளிதாகச் செய்யலாம்,” என்றார்.

பெரும்பாலான இழுவை படகு உரிமையாளர்கள் தமிழகத்தில் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களாக இருப்பதால் இப்பிரச்சனையை இராஜதந்திர வழிகள் மூலம் தீர்க்க கடினமாக உள்ளது என்றார் அமைச்சர்.

நூற்றுக்கணக்கான இயந்திரமயமாக்கப்பட்ட இந்திய படகுகள் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளன என்றார். “இந்த அச்சுறுத்தல் காரணமாக எங்கள் மீனவர்கள் சில நேரங்களில் கடற்றொழிலுக்கு செல்வதை நிறுத்திவிட்டனர்.எங்கள் மக்களிடம் சிறிய கண்ணாடி இழை படகுகள் மட்டுமே உள்ளன,” என்றார்.

13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பற்றி மாத்திரம் பேசுவதை விடுத்து, வடக்கில் உள்ள ஏனைய தமிழ்க் கட்சிகள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்கவில்லை எனவும் அமைச்சர் விமர்சித்தார்.

“13வது திருத்தத்தை முழுமையாகவோ, பாதியாகவோ அல்லது காலாண்டாகவோ நடைமுறைப்படுத்த முடியுமா என்று அவர்கள் தொடர்ந்து கேட்கின்றனர். இது அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும். இதுதொடர்பில் மேலும் கேட்பதற்கு ஒன்றுமில்லை. தமிழ் மக்களுக்கு மிகவும் தீவிரமானது பொருளாதாரப் பிரச்சினை” என்று அவர் கூறினார்.

Exit mobile version