அரசியல்

கிராம உத்தியோகத்தர்களின் சேவை யாப்பு விவகாரம் : சஜித் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

Published

on

கிராம உத்தியோகத்தர்களின் சேவை யாப்பு விவகாரம் : சஜித் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கிராம அலுவலர் சங்கங்களுடன் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாடுகளை விடுத்து, சேவை யாப்பு தொடர்பான பிரிதொரு வரைவே அமைச்சால் பொதுச் சேவை ஆணைக்குழுவின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.வேறொன்றை அனுமதிக்கு அனுப்பி விட்டு பிரச்சினையைத் தீர்த்துவிட்டோம் என போலியான செய்திகளைப் பரப்பி வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தினை அவர் நேற்று(18.06.2024) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது கூறியுள்ளார்.

கிராம உத்தியோகத்தர்களின் சேவை யாப்பு, சம்பள விகிதங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து அமைச்சர்கள் மத்தியில் பலமுறை கேள்வி எழுப்பப்பட்டு, கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டது.

கிராம உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பது குறித்து எந்த பரிந்துரையும் மேற்கொள்ளப்படவில்லை. 2016 இல் வழங்கப்பட்ட 600 ரூபா உதவித் தொகை இப்போதும் வழங்கப்படுகிறது.

கிராமப் புறங்களில் 1000 ரூபா முதல் 2000 ரூபா வரையிலும், நகர்ப்புறங்களில் அலுவலக கொடுப்பனவு 3000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டாலும், அது போதுமான தொகையாக இல்லை.

அலுவலகக் கட்டணத்தை சம்பளத்தில் இருந்து செலுத்தி அலுவலக வசதிகளைப் பெற்று வருகின்றனர்.

வெற்றிடங்களை நிரப்ப 1942 புதிய கிராம அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் மூன்று மாத பயிற்சிக்கு மாதம் 3000 ரூபா தொகையே அனுமதிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை சம்பளத்தை இந்த பயிற்சி கொடுப்பனவாக வழங்குமாறும், இந்த விடயங்கள் அனைத்தும் பல சந்தர்ப்பங்களில் கேள்விக்குள்ளாக்கப்பட்டாலும் இன்னும் தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

Exit mobile version