இலங்கை
சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்களை முடக்க புதிய யோசனை
சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்களை முடக்க புதிய யோசனை
போதைப்பொருள் கடத்தல் உட்பட சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தின் மூலம் வாங்கப்படும் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை நீதிமன்ற உத்தரவின்றி கையகப்படுத்தும் அதிகாரம் கொண்ட சபை ஒன்றை நிறுவுவதற்கான சட்டங்களை விரைவில் நிறைவேற்ற அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
இதன்படி, பரந்த அளவிலான குற்றச்செயல்கள் தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அடுத்த வாரம் அமைச்சரவையின் அனுமதி கோரப்படும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில்,சட்டத்திற்கு புறம்பாக சம்பாதித்த பணத்தின் மூலம் சொத்துக்களை கொள்வனவு செய்ததை உறுதிசெய்த பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகள் இன்றி சொத்துக்களை கையகப்படுத்தும் அதிகாரம், இந்த உத்தேச அதிகார சபைக்கு இருக்கும் என அமைச்சர் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அதிகாரசபை எடுக்கும் முடிவுகளை சவால் செய்ய சட்ட விதிகள் இந்த சட்டத்தில் இருக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
முக்கியமாக போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டதாக நம்பப்படும் சொத்துக்களை கைப்பற்ற பொலிஸார் அண்மைக்காலமாக எடுத்த முயற்சிகளை அடுத்து இந்த புதிய யோசனை முன்வைக்கப்படவுள்ளது.
இவ்வாறான சொத்துக்களை கையகப்படுத்துவதற்கான பொறிமுறை இலங்கையில் இல்லை.
எனவே புதிய சட்டம், இந்தக் குறைபாடுகளை போக்குவதற்கு உதவும் என்றும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.