இலங்கை

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவை: அனுமதி தொடர்பில் தகவல்

Published

on

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவை: அனுமதி தொடர்பில் தகவல்

இலங்கையில் ஸ்டார்லிங்க் (Starlink) இணைய சேவையை இயக்குவதற்கான அனுமதிப்பத்திரம் தொடர்பான இறுதித் தீர்மானம் அடுத்தவாரம் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் (Ganaka Herath)தெரிவித்துள்ளார்.

செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் மூலம் இணைய வசதிகளை வழங்கும் சேவைகளுக்காக இவ்வாறான கோரிக்கை முன்வைக்கப்படுவது இதுவே முதல் தடவை எனவும் அதற்கு தேவையான சட்ட வரைவுகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

உலகின் பணக்கார மற்றும் வெற்றிகரமான தொழில்நுட்ப தொழில்முனைவோர்களில் ஒருவரான எலோன் மஸ்க்கிற்கு (Elon Musk) சொந்தமான ஸ்பேஸ் x திட்டத்தின் மூலம் ஸ்டார்லிங்க் இணைய சேவை தொடங்கப்பட்டது.

ஸ்டார்லிங்க் திட்டத்தின் மூலம், ஃபைபர் ஆப்டிக் கேபிள்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அதிவேக தரவு பரிமாற்றமானது செயற்கைக்கோள் மூலம் மணிக்கு சுமார் 27,000 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கிறது.

ஸ்டார்லிங்க் மூலம், தொலைதூர பகுதிகளில் வசிக்கும் இணைய பயனர்கள் இணையத்தை அணுக முடியும்.

2024 ஆம் ஆண்டில், 5,874 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் இருக்கும், அதில் 5,800 செயற்கைக்கோள்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், இந்தோனேசியாவின் பாலியில் அண்மையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எலோன் மஸ்க் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் மூலம் ஸ்டார்லிங்க் இணைய சேவை வசதியை இலங்கையில் பெற்றுக்கொள்வது தொடர்பில் பரவலாக பேசப்பட்டது.

அந்த சந்திப்பில், இலங்கையில் Starlink சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

Exit mobile version