இலங்கை

கனடாவின் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதில் திணறும் இலங்கை

Published

on

கனடாவின் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதில் திணறும் இலங்கை

2009ஆம் ஆண்டு போரில் இறந்தவர்களின் நினைவேந்தல் தொடர்பான மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதில் கனடாவிலுள்ள (Canada) இலங்கை இராஜதந்திர அதிகாரிகளுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே மேற்கண்ட விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த செய்தியில் மேலும்,

கனடாவில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 240,000 தமிழர்கள் வசிக்கின்றனர்.

போர்க்காலத்தில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாகக் கூறப்படுவதற்கு எதிராக அவர்கள் பரப்புரை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், கிழக்கு மாகாணத்தில் நடந்த அண்மைய சம்பவம் குறித்து கனடாவிலுள்ள தமிழ் உரிமை ஆர்வலர்கள் கேள்வியெழுப்பி வருகின்ற நிலையில், இலங்கை அரசாங்க அதிகாரிகள் மறுப்பு தெரிவிக்க கூட முடியாமல் திணறி வருகின்றனர்.

அதுமாத்திரமின்றி, கனேடிய பிரதமர் ஜஸ்டின் துரூடோ (Justin Trudeau), இலங்கைக்கு எதிரான இனப்படுகொலைக் குற்றச்சாட்டை மீண்டும் புதுப்பிப்பாரா என்ற எதிர்பார்ப்பை இலங்கை கொண்டுள்ளது.

இந்நிலையில், 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

எவ்வாறாயினும், கனடாவின் நாடாளுமன்றம் 2022ஆம் ஆண்டில் மே 18ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அங்கீகரித்துள்ளது.

இருப்பினும், இலங்கையில் போரின் போது என்ன நடந்தது என்பது இனப்படுகொலைக்கு சமமானதல்ல என்று கனடாவின் கூட்டாட்சி உறுதிப்படுத்தியுள்ளது.

அதேவேளை, இது ஆழமான மற்றும் சட்ட அர்த்தமுள்ள கருத்தாகும் எனவும் கனடாவின் கூட்டாட்சி கூறியுள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டு கனேடிய பிரதமர் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக இனப்படுகொலை குற்றச்சாட்டுக்களை முன்வைத்தபோது, இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

மேலும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry), கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்சை (Eric Walsh) அழைத்து, துரூடோவின் அரசியல் உந்துதல் கொண்ட அறிக்கையானது பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலும் உள்நாட்டு அரசியலை மையப்படுத்தியும் வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Exit mobile version