இலங்கை

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நினைவுப்பரிசு

Published

on

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நினைவுப்பரிசு

இலங்கைக்கு வரும் ஒவ்வொரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் விமான நிலையத்தில் இலங்கை தேயிலை அடங்கிய நினைவுப் பரிசை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera) ஆலோசனை வழங்கியுள்ளார்.

தேயிலை கைத்தொழிலை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் நேற்று (13.05.2024) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பயணம் முடிந்து மீண்டும் நாடு திரும்பும் போது விமான நிலையத்தில் இந்த நினைவு பரிசு வழங்கப்படவுள்ளதுடன் தனியார் தேயிலை உற்பத்தியாளர்களும் தமது இணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் இதற்கான செலவை தேயிலை வாரியமும், தனியார் நிறுவனமும் ஏற்கும் நிலையில், தற்போது இலங்கைக்கு வரும் அதிகளவான சுற்றுலா பயணிகள் இலங்கை தேநீரை அருந்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

இதன்காரணமாக சுற்றுலாப் பயணிகள் மத்தியில் எமது நாட்டின் தேயிலையின் மீது மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த வேலைத்திட்டத்தை விரைவில் ஆரம்பிக்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில் இலங்கை தேயிலை சபை, சிறிய தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை, தேயிலை தோட்டக்காரர்கள் சங்க பிரதிநிதிகள் மற்றும் தேயிலை தொழில்துறை பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும், சிலோன் டீயின் (Ceylon Tea) பெயரை உலகில் பிரபலப்படுத்தும் நோக்கில், இந்நாட்டிற்கு வரும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணிகளுக்கும் இலங்கை தேயிலை பொருட்கள் அடங்கிய நினைவுப் பரிசு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version