இலங்கை

இஸ்ரேலுக்கான தொழிலாளர் ஏற்றுமதியை ரத்து செய்யுமாறு கோரிக்கை

Published

on

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கு (Israel) பல்வேறு துறைகளில் பணியாற்றுவதற்காக தொழிலாளர்களை அனுப்புவது குறித்து இஸ்ரேலுடன் இலங்கை அரசாங்கம் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்யுமாறு தொழிலாளர் ஐக்கிய கூட்டமைப்பு கோரியுள்ளது.

குறித்த அமைப்பான இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

“பல தசாப்தங்களாக இஸ்ரேலின் முடமான ஆக்கிரமிப்பால் பாலஸ்தீன (Palestine) பொருளாதாரம் சீரழிந்து, பாரிய வறுமை மற்றும் வேலையின்மைக்கு காரணமாகி, பல பாலஸ்தீனியர்கள் வேலைக்காக இஸ்ரேலை நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், இஸ்ரேலின் தற்போதைய ஆக்கிரமிப்புக்கு முன்னர் ஏறக்குறைய 130,000 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலில் பணியாற்றி வந்தனர்.

இதன்படி இஸ்ரேலின் கட்டுமானத் துறை பணியாளர்களில் கிட்டத்தட்ட 65 வீதமும், விவசாயத் துறை பணியாளர்களில் 25 வீதமும் பாலஸ்தீனர்களாக இருந்தனர்.

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான அதன் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியவுடன், இஸ்ரேல், தமது நாட்டில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களின் பணி அனுமதிகளை ரத்து செய்துள்ளது.

இதன்போது ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறையை நிரப்பவே இலங்கை தொழிலாளர்கள் இப்போது அனுப்பப்படுகின்றனர்.

எனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான போலி அரசாங்கம் சர்வதேச அளவில் பாலஸ்தீனத்துடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நிலையில், தற்போது இஸ்ரேலுடன் செய்துக்கொண்டுள்ள தொழிலாளர் அடிப்படையிலான ஒப்பந்தங்கள் இஸ்ரேலுக்கு அதிக பொருள் மற்றும் அரசியல் ஆதரவை வழங்குவதாக தொழிலாளர் ஐக்கிய கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த ஒப்பந்தங்கள் மூலம் இஸ்ரேலின் தொடரும் இனப்படுகொலைக்கு இலங்கை உடந்தையாகியுள்ளது.

அத்துடன், பிராந்திய மோதலுக்கான சாத்தியக்கூறுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இஸ்ரேலில் மட்டுமன்றி பரந்த பிராந்தியத்தில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

எனவே இலங்கை தொழிலாளர்களை ஏற்றுமதி செய்யும் இஸ்ரேலுடன் இலங்கை செய்துள்ள ஒப்பந்தங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளது.

Exit mobile version