இலங்கை

யாழில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி

Published

on

யாழில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி

யாழ்ப்பாணத்தில் (Jaffna) குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோகம் குறித்து யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட 131652 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோகம் கடந்த 20ஆம் திகதி முதல் கிராம அலுவலர் பிரிவு ரீதியாகவும், கிராம அலுவலர் பிரிவு கொத்தணி ரீதியாகவும் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

யாழ். மாவட்டத்தின் மொத்த சனத்தொகையோடு ஒப்பிட்டு நோக்குகின்ற போது 62.66 வீதமான குடும்பங்கள் மேற்படி அரிசி விநியோகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

மகளிர் சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக கீழ்க்குறிப்பிடப்படும் தகுதிப்பாடுடைய குடும்பங்கள் அரிசி விநியோகத்திட்டத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

1. நலன்புரி நன்மைகள் திட்ட முறைமையின் கீழ் முதலாவது சுற்றில் தெரிவு செய்யப்பட்டவர்கள்

2. நலன்புரி நன்மைகள் திட்ட முறைமையின் கீழ் பயனாளிகளாக அல்லாது 2023 டிசம்பர் வரை சமுர்த்தி உதவி பெற்ற குடும்பங்கள்

3. தகுதிப்பாடுடைய முதியோர்கள், அங்கவீனமுற்றவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்

4. நலன்புரி நன்மைகள் திட்டத்திற்கு மேன்முறையீடு சமர்ப்பிக்க முடியாதுள்ள, சமுர்த்தி உரிமையுடைய, பிரதேச செயலாளர்களால் சிபாரிசு செய்யப்படுகின்ற, குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்கள்

5. பிரதேச செயலாளர்களால் அரிசி வழங்கப்படுதல் வேண்டும் என சிபாரிசு செய்யப்படுகின்ற குடும்பங்கள்

மேலும், நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் சுற்றுநிரூபத்திற்கமைவாக, 10 கிலோகிராம் நாட்டரிசி 1900 ரூபா பெறுமதியில் யாழ் மாவட்டத்தில் அரிசி வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்திருந்த, பதிவு செய்யப்பட்ட 17 அரிசி ஆலைகளுடாக அரிசி விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இன்று 110220 குடும்பங்களுக்கான அரிசி குறித்த அரிசி ஆலைகள் மூலம் விநியோகிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 98175 குடும்பங்களுக்கு பிரதேச செயலாளர்களால் கிராம மட்ட அலுவலர்களூடாக அரிசி வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம், தொடர்ச்சியாக அரிசியை பொது மக்களுக்கு விநியோகிக்கின்ற நடவடிக்கையினை பிரதேச செயலாளர்கள் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மூலம் முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை, நெடுந்தீவு, காரைநகர், சாவகச்சேரி, சண்டிலிப்பாய், சங்கானை, கரவெட்டி, பருத்தித்துறை மற்றும் மருதங்கேணி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் 90 வீதத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரிசி விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏற்கனவே, சமர்ப்பிக்கப்பட்ட மாதிரிக்கமைவாக உரிய தரத்திலும், நிறையிலும் அரிசி கிடைக்கப் பெற்றமை தொடர்பான அறிக்கையை மாவட்ட செயலாளருக்கு வழங்குமாறும், அரிசி வழங்குவதற்காகத் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் பெயர்ப்பட்டியலைத் தமிழ் மொழியில் கிராம அலுவலர்களின் அலுவலகங்களில் காட்சிப்படுத்துமாறும் பிரதேச செயலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

மேலும், சமர்ப்பிக்கப்பட்ட மாதிரிக்கமையாத, தரமற்ற, நிறைகுறைவான அரிசி, அரிசி ஆலை உரிமையாளர்களால் விநியோகிக்கப்பட்டால் உடனடியாக குறித்த அரிசி கையேற்பதை நிறுத்தி அது தொடர்பில் மாவட்ட செயலாளருக்கு அறிக்கையிடுமாறும் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, அரிசி விநியோகம் தொடர்பிலான கண்காணிப்பினை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு மாவட்ட மட்டத்தில் உரிய அதிகாரம் அளிக்கப்பட்ட உத்தியோகத்தர் குழு மூலம் மேற்பார்வை செய்யப்பட்டு வருகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version