இலங்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் குவியும் முறைப்பாடுகள்

Published

on

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் குவியும் முறைப்பாடுகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் படி, 2024 ஆம் ஆண்டின் நான்கு மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான 1371 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

முறையான அனுமதியின்றி வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்தல், சரியான வேலை உத்தரவு இல்லாமல் வெளிநாட்டு வேலைகளை வழங்குவதற்காக பணம் வசூலித்தல், சுற்றுலா விசா மூலம் வெளிநாட்டு வேலைகளுக்கு மக்களை வழிநடத்துதல் போன்ற முறைப்பாடுகள் பணியகத்திற்கு கிடைத்துள்ளன.

பணியகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 495 முறைப்பாடுகளுக்கு இக்காலப்பகுதியில் தீர்வு காணப்பட்டுள்ளதுடன், முறைப்பாடு செய்யப்பட்டவர்களிடமிருந்து பெருந்தொகை பணத்தையும் விசாரணை அதிகாரிகள் மீளப்பெற்றுள்ளனர்.

இதற்கமைய, 680 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகளுக்காக மோசடி செய்பவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்வதற்கும் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்போது, ​​வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பில் 28 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், பணியகத்தின் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி நடத்தப்பட்டு, முறையான பணி உத்தரவைப் பெறாமல் வெளிநாட்டு வேலைக்கு ஆட்சேர்ப்பு செய்த 8 முகவர் நிலையங்களையும் சிறப்பு புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

Exit mobile version