இலங்கை

420 ரூபாவை அடைந்த டொலர்: இலங்கைக்கு பணம் அனுப்ப வேண்டாமென வந்த அறிவிப்பு

Published

on

420 ரூபாவை அடைந்த டொலர்: இலங்கைக்கு பணம் அனுப்ப வேண்டாமென வந்த அறிவிப்பு

நாங்கள் அரசாங்கத்தை பொறுப்பேற்ற போது ஒரு டொலர் 380 ரூபாவாக இருந்ததுடன், கருப்பு சந்தையில் 400 தொடக்கம் 420 ரூபாவிற்கு சென்றிருந்தது என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.

அத்துடன் அந்த சமயத்தில் இலங்கைக்கு பணம் அனுப்ப வேண்டாமென அறிவிப்பு வந்த போதும் புலம்பெயர் தமிழர்கள் உட்பட இலங்கையர்கள் இலங்கைக்கு டொலரை அனுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இந்த நாடு விழுந்துவிட்டது மீளவே முடியாது என்றார்கள், இந்த நாட்டை மீட்க முடியாது என்றார்கள். ஆனால் ஜனாதிபதியின் வழிகாட்டல், இராணுவம், பொலிஸார் மற்றும் அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பினால் கடின உழைப்பினால் இந்த நிலையை அடைந்துள்ளோம்.

ஜூலை 2022இல், தங்கம் உட்பட எங்களின் இருப்பு 1815 மில்லியன் டொலர்கள். இந்த ஆண்டு பிப்ரவரியில், இது 4491 மில்லியன் டொலர்களாக மாறியுள்ளது. நாங்கள் சவாலை ஏற்றுக்கொண்டபோது, ​​பொருட்களின் விலை உயர்வு விகிதம் 80 சதவீதம் வரை வேகமாக அதிகரித்து வந்தது.

அப்படியே போயிருந்தால் இந்த மாதம் 100 ரூபாய்க்கு வாங்கிய அப்பத்தை அடுத்த மாதம் 200 ரூபாய்க்கு வாங்க வேண்டியிருக்கும். நாங்கள் அரசாங்கத்தை பொறுப்பேற்ற போது ஒரு டொலர் 380 ரூபாவாக இருந்தது. கருப்பு சந்தையில் 400 தொடக்கம் 420 ரூபாவிற்கு சென்றது.

டொலர் விலையானது 700 முதல் 800 வரை செல்லும் எனவும், இந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியாது எனவும் சிலர் கூறினார்கள்.

ஆனால் இன்றைய நிலவரப்படி டொலர் மதிப்பு சுமார் 290 ரூபா வரை குறைந்துள்ளது. எங்களுடைய நாட்டுக்கு டொலர்களை அனுப்ப வேண்டாம், இந்த நாட்டை அழிக்க வேண்டும் என்று சிலர் கூறிய போது, ​​எமது நாட்டு பிள்ளைகளின் பெற்றோர்கள் வெளிநாடுகளில் இருந்து டொலர்களை நாட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள எமது புலம்பெயர் மக்கள், ஏனைய மாகாணங்களில் இருந்து சென்ற புலம்பெயர் தமிழ் முஸ்லீம்கள், தொழிலாளர்களாகச் சென்ற புலம்பெயர் சிங்கள சிங்களவர்கள், புலம்பெயர் இலங்கையர்கள் எங்களுக்காக டொலர்களை நாட்டுக்கு அனுப்பினர்.

பணம் அனுப்பவேண்டாம் என்று சிலர் கூறிய போது சரியான வழியில் இலங்கைக்கு பணம் அனுப்பியதால் இன்று நாடு மீண்டுள்ளது. அதற்காக வெளிநாட்டில் பணியாற்றும் தொழிலாளர்களின் குடும்பங்கள் மற்றும் பிள்ளைகள் அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version