அரசியல்

ரணிலின் சாம்ராஜ்யத்தை உடைக்க திணறும் பசில் இராஜதந்திரம்

Published

on

ரணிலின் சாம்ராஜ்யத்தை உடைக்க திணறும் பசில் இராஜதந்திரம்

அரகலய ஆர்ப்பாட்டத்தின் பின்னர் நாட்டை விட்டு வெளியேறிய மொட்டு அணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச(Basil Rajapaksa) இலங்கை அரசியலில் புதிய இராஜதந்திர நகர்வை ஆரம்பிக்க நாடு திரும்பியுள்ளார்.

தான் கட்டமைத்த கோட்டையை ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe)இருந்து மீட்கவே இந்த வருகை புலப்படுவது சாமானியன் விளங்கிக்கொள்ளும் சாட்சியமாக மாறிவிட்டது.

ஆனால், பசிலின் நகர்வோ ரணிலின் புதிய சாம்ராஜ்யத்தை உடைக்க முடியாத நிலையில் உள்ளது.

காரணம் பசிலிடம் இருந்த முன்னாள் உறுப்பினர்கள் அனைவரும் தற்போது ரணிலின் அசைவுக்கு ஆடிக்கொண்டிருப்பதே.

சில கூட்டம் தெரிந்தே ஆடினாலும் சில கூட்டம், தமது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காக புரிந்து ஆடுகிறது.

ஒருகாலத்தில் பசிலின் தரப்பால் பகிரங்கமாக வெளியேற்றப்பட்ட ரணில் இன்று இலங்கையின் அரியாசனத்தை தக்கவைத்துள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் தனது இருப்பை மேலும் 5 வருடம் தக்கவைத்துக்கொள்ள நரியின் தந்திரம் போன்ற அரசியலை செய்பவர் என உவமிக்கப்படும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது காய் நகர்த்தல்களை ஆரம்பித்துவிட்டார்.

நாடாளுமன்றில் இருந்தும் பதவியில் இருந்தும் வெளியேற்றப்பட்டோம் என்ற வஞ்சகம் மனதுக்குள் இருந்தாலும், ரணிலின் எதிர்கால திட்டத்திற்கு ஆணிவேறிட பசிலின் ஆதரவு தேவை படுவது என்னவோ நிதர்சனம்தான்.

இப்போது தனது சாம்ராஜ்யத்தை காப்பாற்ற வாக்கு தேவைப்படுகிறது. பொருளாதார வீழ்ச்சி கண்ட இலங்கையில் அரியசானத்திற்கான தேர்தல் நகர்வுகள் ஆரம்பித்துவிட்டன.

குப்பைக்கூடைக்குள் தூக்கி எறியப்பட்ட இலங்கையின் உள்ளுராட்சி தேர்தலுக்கு பின்னால், நடந்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் அரியாசன போட்டிக்கான ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது.

எவ்வாறாயினும் ரணிலே அரியாசனத்தில் ஆட்சி செய்யும் சிங்க கொடி ஏந்திய நாட்டிற்கு தலைவனாக போகிறார் என்பது நிரூபணம் ஆகிவிட்டது.

இந்நிலையில், எதிர்க்கட்சி ஆசனத்திற்கான போட்டியே தற்போது பொதுத் தேர்தல் வடிவில் நடக்கவுள்ளது. சுதந்திர இலங்கையில் தற்போது மத முரண்பாடானது தலைதூக்கியுள்ளது.

இந்த விடயமானது ஜனாதிபதி தேர்தலுக்கு அசாதாரணமான விடயமாக பார்க்கப்பட்டது. பெரும்பான்மை வாக்குகள் இலங்கையில் குவிந்துகிடந்தாலும் ஆட்சியை தீர்மானிப்பதென்னவோ சிறுபான்மையினரின் வாக்குகளே.

அதை தக்கவைத்துக்கொள்ளவே இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தந்திர அரசியலின் நகர்வாக யாழ்ப்பாணத்தில் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்.

காணி விடுவிப்பு, வைத்தியசாலை திறப்புவிழா என கூறினாலும், அங்கு இடம்பெற்றிருப்பது என்னவோ தேர்தல் முன்னாயத்த அரசியல் பிரச்சாரமாகவே பார்க்கப்படுகிறது.

இது இவ்வாறிருக்க, இலங்கையின் சிவப்பு சகோதரர்கள் என அடைமொழியிடப்படும் அனுர தரப்பு தனது சதுரங்க ஆட்டத்தில் காய்களை நிதானமாக நகர்த்தி வருகிறது.

இந்திய விஜயம் முடிந்து, வடக்கில் காலடியெடுத்துவைத்த அவர்கள் தற்போது கனடாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். அரகலயவின் பின்னர் அனுர தரப்புக்கு இலங்கையில் வாக்கு வங்கி கடந்த காலங்களிலும் பார்க்க அதிகரித்துள்ளமையை காணக்கூடியதாய் உள்ளது.

பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகள் அவர்களுக்கு கிடைத்தாலும் தமிழரின் வாக்குகளை பெறுவதே அவர்களின் நோக்கமாக காணபடுகிறது. அதற்கு புலம்பெயர் தமிழர்களின் ஆதரவென்பது அனுர தரப்புக்கு அவசியமாகிவிட்டது.

அதற்கான ஆணிவேராகவே கனடா விஜயம் பார்க்கப்படுகிறது. ஆனால் சஜித் பிரேமதாசாவின் நடவடிக்கைகள் இதுவரை தேர்தல்மயப்படவில்லை. இதனடிப்படையில் இன நல்லிணக்கம் இலங்கையில் சிறுபான்மையினருக்கு பெரும் துயராகவே மாறிவருகிறது.

வடக்கு கிழக்கில் தமிழரின் நில ஆக்கிரமிப்பு, பௌத்தமயமாக்கல், சிங்கள குடியேற்றங்கள் என்பன தொடரும் விடயமாக காணப்படுகிறது. போராட்டங்களும், உரிமைகோரல்களும் மக்களால் தொடரப்பட்டாலும் அவை, கண்டன அறிக்கைகளுடன் முற்றுபெற்றுவிடுகின்றன.

அதன் அடுத்தகட்டமாக பார்த்தால் வலை வீசியவரிடமே சிக்குவதை போல் மோடி அரசாங்கத்தை தலையிடக்கோரி இந்தியாவிற்கு பறக்கும் கடிதங்கள். இவை மாத்திரமே நிரந்தர தீர்வு எனும் தமிழரின் மொழிகளுக்கான பதிலாகிவிடுகின்றன.

அண்மையில் இடம்பெற்ற வெடுக்குநாறி விவகாரத்தை இங்கு சுட்டிக்காட்ட கூடியதாய் இருக்கும் இதற்கான உதாரணமாக. இலங்கை அரசியல்வாதிகளுக்கும் அரசியல் வெற்றிகளுக்கும் ஜனநாயகம் என்பதை தாண்டிலும் மதவாதம் என்பது அடிப்படைடையாகிவிட்டது.

பெரும்பான்மையினரின் வாக்குகளைப்பெற போட்டியாளர்கள் மகாநாயக்க தேரர்களிடம் ஆசிகளை பெறுகின்றனர்.

இதன் பின்னால் உள்ள அரசியல் என்பது மகாநாயகர்களின் வாக்குகள் எதை நோக்குகிறதோ அதுவே பெரும்பான்மையினரின் வாக்குகளாக மாறுகிறது.

மேலே சுட்டிக்காட்டிய விடயத்தின் அடுத்தகட்டம்தான் மதரீதியான தாக்குதல். இதுவே 2019 கோட்டாபய ராஜபக்சவின் ஆசனத்திற்கு வித்திட்டது என குற்றச்சாட்டுகளும் தொடர்கின்றன.

இலங்கையில் இடம்பெற்ற அந்த கோர உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது பலநூறு மக்களின் உயிர்களை காவுகொண்டது. இதற்கு உரிமைகோரிய சஹ்ரான் ஹாசிம் தரப்பானது தாக்குதலுக்கான காரணத்தை ஒரு காணொளிமூலம் வெளிப்படுத்தியிருந்தது.

இந்த தாக்குதலின் விசாரணைகள் இலங்கை தரப்புக்கு மாத்திரமல்லாது சர்வதேசத்தின் தலையீட்டுக்கும் வழிவகுத்தது. முடிவில் சனல்4 ஆவணப்படம்.

இந்நிலையில் சனல்4 ஆவணப்படத்தில் மதவாத அரசியல் செய்பவர்கள் என குற்றம்சாட்டப்பட்ட பிரதான தரப்பான ராஜபக்சக்களின் இந்த கால அரசியல் போக்கு பதவியை தக்கவைப்பதிலும் தாண்டி, நிலையான கட்சியை வடிவமைப்பதையே நோக்கமாக கொண்டுள்ளனர்.

அதன் ஆரம்பக்கட்டமே பசில் ராஜபக்சவின் கழுத்தில் தொங்கிய சிவப்புத்துண்டு இன்று நாமல் ராஜபக்சவுக்கு(Namal Rajapaksa) சூட்டப்பட்டுள்ளது.

Exit mobile version