இலங்கை

நாட்டில் மீண்டும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும்

Published

on

நாட்டில் மீண்டும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும்

சர்வதேச கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் இறுதிகட்டத்தை எட்டவுள்ள நிலையில், நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் மாற்றியமைக்கப்படும் என்று சிலர் குறிப்பிடுவது பாரிய அழிவுக்கு இடப்படும் அடித்தளமாகும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (26) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

”சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போதைய அரசாங்கம் ஏற்படுத்திக் கொண்டுள்ள இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தை மாற்றுவதற்கு எவரேனும் முயற்சிப்பார்களானால், அவர்களால் இரண்டு வாரங்கள் கூட இந்நாட்டை ஆட்சி செய்ய முடியாது.

நாம் கடன் பெற்றுள்ளதும், பெற்ற கடனை மீளச் செலுத்துவது தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதும், கடன் ஒப்பந்தத்தை மேற்கொள்வதும் இலங்கை அரசாங்கத்தினாலன்றி, ரணில் விக்ரமசிங்க என்ற தனிநபராலோ அல்லது பிறிதொரு நபராலோ அல்ல.

இலங்கை அரசாங்கம் என்பது தற்போதைய அரசாங்கத்தைப் போன்றே, இனிவரவுள்ள அரசாங்கங்களையும் குறிக்கும். அதற்கமைய தற்போதைய அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ள பொறுப்புக்கள், அடுத்த அரசாங்கத்துக்கும் உரித்துடையதாகும்.

சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் சட்ட திட்டங்களை மதிக்காத, தன்னிச்சையான அல்லது முட்டாள் தனமான தீர்மானங்களை எடுக்கும் அரசாங்கமானால் அந்த அரசாங்கம் பாரிய அழிவினையே எதிர்கொள்ளும்.

எனவே இந்த ஒப்பந்தத்தை மாற்றினால் சர்வதேசத்துடன் எந்தவொரு கொடுக்கல், வாங்கல்களையும் முன்னெடுக்க முடியாது. அத்தோடு மீண்டும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும்.

எவ்வாறிருப்பினும் இவ்வாறான கருத்தினை கூறும் தரப்பினர் அவற்றை வெளிப்படுத்துவதும் நன்மைக்கே. அப்போது தான் மக்களுக்கு இவர்களின் இயலுமை என்ன என்பது புரியும்.” என தெரிவித்தார்.

Exit mobile version