இலங்கை

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தொடர்பில் பொது மக்களுக்கு அறிவிப்பு

Published

on

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தொடர்பில் பொது மக்களுக்கு அறிவிப்பு

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக அரச ஜோதிடர்கள் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள சுப நேரங்களின் பட்டியலைப் பின்பற்றுமாறு பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

புத்த சாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு புத்தாண்டு நேரத்தை கணிப்பதில் பாரிய தவறு நடந்துள்ளதாக தேசிய ஜோதிடர்கள் அமைப்பு குற்றம்சாட்டியிருந்தது. கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அதன் உறுப்பினர் ரொஷான் சானக திசேரா இதனை கூறியிருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வருடம் அடுப்பு மூட்டுவதற்காக அரச சுபக்குழு வழங்கிய நிகழ்ச்சிநிரலில் சிக்கல் நிலை காணப்படுகிறது. இதன்படி அரச சுபக்குழு வழங்கிய சுப நிகழ்ச்சி அட்டவணையில் சதி காணப்படுகிறது.

இந்நிலையில், இரவு வேளைகளில் புத்தாண்டு மங்கள காரியங்களை முன்னெடுப்பதன் மூலம் சிறுவர்களுக்கு மங்கள காரியங்களைப்பற்றிய புரிதல் காணப்படாது. மேலும், இவ்வருடம் அரச அனுசரணை சபையினால் அடுப்பு மூட்ட வழங்கப்பட்ட நேரம் ஜோதிடத்திற்கு புறம்பானது.

நள்ளிரவு வழங்கப்பட நேரத்தை மாற்றியமைத்து மறுநாள் காலை ஜாதகத்தை பரிந்துரைக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் தமிழ் சிங்கள புத்தாண்டின் போது நல்லநேரம் அல்லது சுபவேளை நேரம் குறித்தலில் தவறு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை இலங்கையின் அரச ஜோதிடர்கள் குழு நிராகரித்திருந்தது.

நடைமுறைச் சிக்கல்கள் இருந்தபோதிலும் இரவு வேளையிலேயே சடங்குகளுக்கு மிகவும் பொருத்தமான நேரம் அமைவதை அந்த குழு நியாயப்படுத்தியிருந்தது. குழு உறுப்பினர் ஜோதிடர் ஜி.எம். குணபால கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது இது தொடர்பில் விளக்கமளித்திருந்தார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில், 2024 ஏப்ரல் 13ஆம் திகதி இரவு 9.05 மணிக்கு சூரியப் பெயர்ச்சி ஏற்படுவதாகவும், சூரியன் மறையும் இரவு 9.05 மணி முதல் ஆறு மணித்தியாலம் இருபத்தி நான்கு நிமிடங்களுக்குள் புத்தாண்டு சடங்குகள் சுப வேளையில் குறிப்பிடப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன் ராகு காலத்தை தவிர்த்து ஆறு மணி 24 நிமிடங்களில் இரவில் சுப நேரம் குறிக்கப்படுகிறது. புத்தாண்டு சடங்குகளை இரவில் கடைப்பிடிப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.

எனினும் சடங்குகளுக்கு சிறந்த நேரம் இரவிலேயே அமைகிறது. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இவ்வாறான இரவு நேர சுபநேரங்கள் வரும். குழுவின் பெரும்பான்மையானவர்கள் இந்த நேரத்தை அங்கீகரித்த நிலையில், 42 பேரில் ஐந்து உறுப்பினர்களே ஆட்சேபனை தெரிவித்தனர்.

அவர்கள் பகல் நேரத்தில் குறிக்கப்பட்ட சுப நேரங்களை விரும்புகின்றனர். அத்தோடு, இந்த ஐந்து உறுப்பினர்களில் நான்கு பேர் குழுவுக்கு புதியவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த நிலையிலேயே சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக அரச ஜோதிடர்கள் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள சுப நேரங்களின் பட்டியலைப் பின்பற்றுமாறு பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version