இலங்கை

கோட்டாபயவை கொல்ல சதி! புலம்பெயர் தமிழ் மக்கள் மீது போடப்பட்ட பழி

Published

on

கோட்டாபயவை கொல்ல சதி! புலம்பெயர் தமிழ் மக்கள் மீது போடப்பட்ட பழி

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஸவை பதவியில் இருந்து நீக்கியதன் பின்னணியில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இருப்பதாக அவரது முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும், முஸ்லிம் சமூகத்தினரே இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கியதாகவும் அவர்களில் சிங்கள பௌத்த சக்திகள் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச எதிர்ப்புப் போராட்டங்களின்போது புலனாய்வுப் பிரிவினர் தமது கடமைகளை சரியாக செய்யவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால், ஒட்டுமொத்த பாதுகாப்புத்துறையும் வீழ்ச்சியடைந்துள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.

முன்னாள் அதிபரால் நியமிக்கப்பட்ட மிக நெருக்கமான அதிகாரிகள் பலர் தமது பொறுப்புக்களை புறக்கணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி மிரிஹானவில் உள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டபோது தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் கோட்டாபய வீட்டில் இருந்தார்.

இதன்போது அவர்கள் இருவருக்கும் இடையில் தனிப்பட்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. வீட்டினருகே போராட்டம் நடத்த சுமார் 150 பேர் வருவார்கள் என உளவுத்துறையினர் தகவல் வழங்கியிருந்தனர்.

ஆனால், அங்கு வந்தவர்களின் எண்ணிக்கை 2,500 பேருக்கு மேல் இருக்கும். பேராட்டக்காரர்களை கட்டுப்படுத்த கலவரத் தடுப்புப் பிரிவினரை அழைப்பதிலும் தாமதம் ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றுவதற்கு பாதுகாப்புப் படையினர் அரை மணித்தியாலம் தாமதித்திருந்தால் கோட்டாபய ராஜபக்ஷவைக் கொல்ல திட்டமிட்டிருப்பார்கள் என்று அவர் வெளிப்படுத்தினார்.

முஸ்லிம் சமூகத்தினரே இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கியதாகவும் கோட்டாபய ராஜபக்ஷவை பதவியில் இருந்து நீக்கியதன் பின்னணியில் கத்தோலிக்க திருச்சபை, முஸ்லிம் சமூகம் மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இருப்பதாகவும், சிங்கள பௌத்த சக்திகள் அவர்களில் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version