இலங்கை

தேர்தல்கள் குறித்து கட்சிகளின் நிலைப்பாடு

Published

on

தேர்தல்கள் குறித்து கட்சிகளின் நிலைப்பாடு

தேர்தலுக்கான காலம் நெருங்கி வரும் நிலையில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்த விரும்புவதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி, செப்டம்பர் 18ஆம் திகதி முதல் ஒக்டோபர் 18ஆம் திகதிக்கு இடையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும். இதன்படி, ஜூலை 17ஆம் திகதி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்.

எனினும், நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது என்ற முடிவு ஜனாதிபதியின் கைகளிலேயே உள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்னும் தம்மை வேட்பாளராக அறிவிக்காதபடியால், எந்த வாக்கெடுப்பு முதலில் வரும் என்பதில் மர்மம் நீடிக்கிறது.

தேர்தல் அமைப்பாளர்களை நியமிக்கும் பணியில் ஐக்கிய தேசியக் கட்சியின் அணி மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையிலேயே இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவூப் ஹக்கீமும் மனோ கணேசனும் இருமுனைப் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துவதும், ஜனாதிபதிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் ஒரு நல்லுறவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை ஆராய்வதும் என்ற முனைப்பில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அழைப்பு, பரிசீலிக்கப்படுவதற்கும் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கும் தகுதியுடையதாக இருந்தாலும் கூட, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியுடன் ஒரு நல்லுறவுக்கு இணங்குவாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

எனினும், தொங்கு நாடாளுமன்றம் ஒன்று அமையுமாக இருந்தால் இந்த நல்லுறவு கைகொடுக்கக்கூடும் என குறித்த ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version