இலங்கை

வெடுக்குநாறிமலை காட்டுமிராண்டித்தனம்

Published

on

வெடுக்குநாறிமலை காட்டுமிராண்டித்தனம்

வவுனியா வெடுக்குநாறிமலையில் பொலிஸார் மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனத்துக்கு யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

அத்தோடு இதற்கு எதிராக பொது அமைப்புகளால் நல்லூரில் இன்று (11.03.2024) மாலை நடைபெறவுள்ள போராட்டத்தில் பங்கேற்று வலுச்சேர்க்குமாறும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

வெடுக்குநாறிமலையில் பொலிஸார் செயற்பட்ட விதம் தொடர்பாக மணிவண்ணன் வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், ‘சிவ பக்தர்களுக்குரிய கவலைகள் நீங்கி, காரிய வெற்றியை தரக் கூடிய நாள் மகா சிவராத்திரி விரத நாளாகும். அந்நாளில் சிவாலயங்களில் பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து ஓம் நமசிவாய என்று திரு நாமத்தை உச்சாடனம் செய்வார்கள்.

அவ்வாறே தமிழர்களின் மிகத் தொன்மையான வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்திலும் சிவபக்தர்கள் ஒன்று கூடி சிவபெருமானுக்கு ஆராதனைகளைச் செய்தார்கள்.

அந்நேரத்தில் சிவபூஜையில் கரடி போல் உள்நுழைந்த பொலிஸார் அங்கிருந்த சிவபக்தர்கள் மீது தாக்குதல் நடத்தி வலுக்கட்டாயமாக வெளியேற்றியதோடு ஆதிசிவனுக்கு படையல் செய்வதற்காக கொண்டு வந்த பொருட்களையும் தூக்கி வீசியமை மிலேச்சத்தனமான செயலாகும்.

ஆரம்பத்தில் வீதித் தடைகளையிட்டு ஆதிசிவன் ஆலயத்திற்கு பக்தர்கள் செல்வதைத் தடுத்தும் பின்னர் கால்நடையாக நடந்து செல்லுமாறு அனுமதித்து, அங்கு சென்றவர்கள் குடிப்பதற்கு குடிநீரை தடை செய்து வன்கொடுமை புரிந்தனர்.

தமிழர்களின் மிகத் தொன்மையான ஆதிசிவன் ஆலயத்திற்கு பௌத்த பிக்குகள் மற்றும் சிங்கள மக்கள் செல்லுகின்ற போது அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து பாதுகாப்பு வழங்குகின்ற பொலிஸார் தமிழர்கள் சிவபெருமானின் முக்கிய விரத நாளாகிய சிவராத்திரியில் கூட அடக்குமுறைகளைப் பயன்படுத்தி பூஜை வழிபாடுகளை தடைசெய்கின்றார்கள் என்றால் இது தமிழர்கள் மீதான அப்பட்டமான திட்டமிடப்பட்ட கலாசாரப் பண்பாட்டு இன அழிப்பாகும்.

இவ்வாறான கட்டமைக்கப்பட்ட இனப் படுகொலைகளுக்கு எதிராகவும் மரபுசார் வழிபாட்டுரிமைக்காகவும் தமிழர்கள் ஒன்றுபட்டு போராட வேண்டியது இன்றைய காலத்தின் நியதியாகும்.

அந்தவகையில், வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான செயலினைக் கண்டிப்பதோடு இந்த செயலினை கண்டித்து பொது அமைப்புக்களினால் இன்று நல்லூரில் ஒழுங்குபடுத்தப்பட்டிக்கும் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்‘ என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version