அரசியல்

ரணிலை மொட்டுக்கட்சி ஆதரிக்குமா..! அடுத்த சந்திப்பில் தீர்மானம்

Published

on

ரணிலை மொட்டுக்கட்சி ஆதரிக்குமா..! அடுத்த சந்திப்பில் தீர்மானம்

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கொள்கை ரீதியிலான பிரச்சினை உள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்சவும், ஸ்தாபகரான பசில் ராஜபக்சவும் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வியாழக்கிழமை இரவு நடைபெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது ஜனாதிபதித் தேர்தலை மையப்படுத்தியதாகவே இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இதில் ஜனாதிபதி பணியாட்தொகுதி பிரதானி சாகல ரத்நாயக்கவும் பங்கேற்றுள்ளார்.

இதன்போது “அதிகாரப் பகிர்வு மற்றும் அரச சொத்துக்களைத் தனியார் மயப்படுத்தல் போன்ற செயற்பாடுகளால் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க முடியாத கொள்கை ரீதியிலான பிரச்சினை உள்ளது” என ராஜபக்சக்கள் இருவரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி “பொலிஸ் அதிகாரத்தைத் தவிர ஏனைய அதிகாரங்களைப் பகிர்வது பிரச்சினை அல்ல என்றும், சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது கட்டாயம்” என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படாமை தொடர்பிலும் ராஜபக்ச தரப்பில் இருந்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

அதேவேளை, “ரணிலை ஆதரிக்கும் முடிவை மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் எடுக்கும் பட்சத்தில் மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோரின் வெற்றிக்காக உழைத்தது போல் ரணிலின் வெற்றிக்காக உழைப்பதற்குத் தான் தயார்” என பசில் இதன்போது கூறியுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.

எனினும், மேற்படி சந்திப்பில் இறுதி இணக்கப்பாடு எதுவும் எட்டப்படாத நிலையில் மீண்டும் இரு தரப்பினரும் சந்தித்துப் பேச்சு நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்து நடைபெறவுள்ள இரண்டாவது சந்திப்பின்போது ஜனாதிபதித் தேர்தல் மற்றும் மொட்டுக் கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் பற்றி ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தப்படவுள்ளதோடு ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுக் கட்சி ரணிலை ஆதரிக்குமா அல்லது வேட்பாளர் ஒருவரை நிறுத்துமா என்பதும் அந்தக் கூட்டத்திலேயே தீர்மானிக்கப்படவுள்ளது.

Exit mobile version