இலங்கை

வெடுக்குநாறியில் பொலிஸாரின் செயல் அடாவடித்தனமே: டக்ளஸ்

Published

on

வெடுக்குநாறியில் பொலிஸாரின் செயல் அடாவடித்தனமே: டக்ளஸ்

வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோயிலில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் அனைத்தும் அடாவடித்தனம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கண்டனம் வெளியிட்டுள்ளார்.

குறித்த விடயத்தினை அவர் இன்று (09.03.2024) காலை பளைப் பகுதியில் இடம்பெற்ற எரிபொருள் நிலைய திறப்பு விழாவில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், சிவராத்திரிதினம் என்பது இந்துக்களின் முக்கிய சமயம் சார் நிகழ்வாகும். இதனை முன்னிட்டு ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ள அடியவர்கள் சென்றபோது பொலிஸார் தடுத்து நிறுத்தி அடாவடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோயிலில் நீதிமன்ற அனுமதியுடன் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிவ பக்தர்களையும், அவர்களின் வழிபாட்டையும் அவமானப்படுத்தும் வகையில் பொலிஸார் நடந்துகொண்ட விதம் அவர்களது அடாவடித்தனமாகவே இருக்கின்றது. ஆலய தரிசனம் செய்வது அவரவர் உரிமையாகும்.

இதைத் தடுப்பதற்கு எவருக்கும் அதிகாரம் கிடையாது. இவ்வாறான நிலையில் குறித்த ஆலயப் பகுதியில் பொலிஸார் இவ்வாறான தடைகளையும் அடாவடித்தனங்களையும் செய்வதற்கு யார் அனுமதி கொடுத்தது? அதேநேரம் இதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது.

அத்துடன் நடைபெறவுள்ள அமைச்சரவையிலும் இவ்விடயம் தொடர்பில் கொண்டு செல்லவுள்ளேன் என்பதுடன் இனிவருங்காலங்களில் பொலிஸார் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளாதிருப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version