இலங்கை

ரணிலுக்கு சஜித் பதிலடி

Published

on

ரணிலுக்கு சஜித் பதிலடி

நாட்டைச் சீரழித்தவர்களைப் பாதுகாக்கும் செயற்பாடுகளிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஈடுபடுகின்றார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (06.03.2024) நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்குப் பதில் உரை நிகழ்த்தும் போதே சஜித் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி உரையாற்றும்போது நரகம் தொடர்பிலும், தொங்கு பாலம் தொடர்பிலும் குறிப்பிட்டார். ஆனால், நரகத்தின் நிறுவுநர்களை நீங்கள் தானே பாதுகாக்கின்றீர்கள்.

இந்த நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டு சென்றவர்களிடமிருந்து நாட்டு மக்கள் நட்டஈட்டைப் பெறுவதைத் தடுத்தது நீங்கள்தானே. நாட்டின் சொத்துக்களைச் கிடைக்கச் செய்யாது இருப்பவரும் நீங்கள் தானே.

திருடர்களின் ஆணையில் பதவிக்கு வந்தவர் நீங்களே. நாட்டைச் சீரழித்த ராஜபக்‌சக்கள் அந்தத் தொங்கு பாலத்தில் மேலே வர உதவுபவரும் நீங்களே.

உங்களின் செயற்பாடுகளால் 220 இலட்சம் மக்கள் நிர்க்கதியாகியுள்ளனர். நீங்கள் இந்த நாட்டு மக்களுக்கு வழங்கும் தீர்வு தான் என்ன? என்று ஜனாதிபதியிடம் கேட்கின்றேன்.

இதேவேளை, தான் பெரிய தீ பிழம்புக்குள் பாய்ந்துள்ளதாகவே ஜனாதிபதி கூறியுள்ளார். ஆனால், உண்மையில் பாய்ந்தது தீ பிழம்புக்குள் அல்ல. திருடர்கள் கூட்டத்துக்குள்ளேயே ஆகும்.ஒருபோதும் தனக்கு வாக்குகள் மூலம் பெற்றுக்கொள்ள முடியாததைத் திருடர்கள் மூலம் பெற்றுக்கொண்டுள்ளார் ஜனாதிபதி.

ஜனாதிபதி மாதாந்தம் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்கின்றார். நிகழ்நிலைக் காப்புச் சட்டம், பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மூலம் ஒடுக்குமுறைகளைச் செய்ய முயற்சிக்கின்றார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் எந்தக் கருத்தையும் ஜனாதிபதி இப்போது கூறுவதில்லை. தொங்கு பாலத்தில் ஏறி மேலே வந்தவர்கள் நாட்டைச் சீர்குலைத்த ராஜபக்‌ச குழுக்களே ஆகும்.

எவ்வாறாயினும் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வை ஐக்கிய மக்கள் சக்தி தயாரித்துள்ளது. பொருளாதார முன்னேற்றம் தொடர்பான வேலைத்திட்டத்தையே நாம் எதிர்பார்த்துள்ளோம். அனைவரையும் இணைத்து அனைவரும் நன்மையடையும் பொருளாதார வளர்ச்சியையே எதிர்பார்க்கின்றோம்” என்று சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார் .

Exit mobile version