இலங்கை

உயிரின்றி தாயிடம் வந்த மகன்: உலக தமிழர்களை உலுக்கிய மரணம்

Published

on

சாந்தனின் இறுதிக்கிரியைகள் இன்றைய தினம் அவரது இல்லத்தில் முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமாகவுள்ளன.

இறுதிக் கிரியைகள் நிறைவுப் பெற்றதும் பூதவுடல் உடுப்பிட்டி சனசமூக நிலையத்திற்கு எடுத்துக் செல்லப்பட்டு அங்கு நினைவேந்தல் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் சாந்தனின் பூதவுடல் வல்வெட்டித்துறை, பொலிகண்டி ஊடாக எள்ளங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புடைய சாந்தன் எனும் சுதேந்திர ராசா சென்னையில் கடந்த 28ஆம் திகதி காலமானார்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த சாந்தன் விடுவிக்கப்பட்டு திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

தனது தாய் நாட்டிற்கு திரும்பி தாயார் கையால் ஒரு வாய் உணவு உண்ண வேண்டும் என்பதே சாந்தனின் நீண்ட கால ஆசையாக இருந்தது என அவரைப் பற்றி அறிந்த பலரும் தெரிவித்திருந்தனர்.

மகனை பார்த்து விட மாட்டோமா என பரிதவிப்பில் இருந்த தாய்க்கு கிட்டியதோ மகனின் உயிரற்ற உடலை பார்க்கும் வாய்ப்பு தான்.

இந்த நிலையில் சாந்தனின் மரணமும், தாய் நாட்டிற்கு உயிரோடு திரும்ப முடியாது போன சாந்தனின் நிலைமையும் உலக தமிழர்களை உலுக்கி பார்த்து விட்டது என்று தான் கூற முடியும்.

சாந்தனின் மரணம் ஏதோவொரு வகையில் அனைவரின் மனதையும் துளைத்து விட்டது என்பதற்கு மாற்று கருத்தில்லை.

Exit mobile version