இலங்கை

இரகசிய வாக்குமூலம் வழங்கவுள்ள சமன் ரத்நாயக்க

Published

on

இரகசிய வாக்குமூலம் வழங்கவுள்ள சமன் ரத்நாயக்க

மருந்துக் கொள்வனவு ஊழல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க, இரகசிய வாக்குமூலமொன்றை வழங்கத் தயாராகவுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய மருந்தைக் கொள்வனவு செய்தல், விநியோகித்தல் தொடர்பான வழக்கு நேற்று(02.03.2024) நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சமன் ரத்நாயக்க நேற்றுமுன் தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக முன்னிலையாகி ஏழு மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் சமன் ரத்நாயக்க கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் மாளிகாகந்த நீதவான் ரத்நாயக்கவை மார்ச் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எனினும் அந்த நேரத்தில் சமன் ரத்நாயக்க, நீதவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்கத் தயாராக இருப்பதாக தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புக்கு அனுமதி வழங்கிய நீதவான், அவரை மார்ச் 4ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகி இரகசிய வாக்குமூலத்தை வழங்குமாறு உத்தரவிட்டார். இதன்படி எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதி வரை சமன் ரத்நாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் 10ஆவது சந்தேக நபரான சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க கைது செய்யப்பட்டதாக பிரதி மன்றாடியார் நாயகம் நீதிமன்றில் தெரிவித்தார்.

மேலும், இந்திய கடன் வரியின் கீழ் அவசரகால கொள்முதல் செயல்முறை குறித்து தெளிவான புரிதல் இருந்தது எனினும் சர்ச்சைக்குரிய மருந்துகளை வாங்குவதற்கு சுகாதார அமைச்சின் கீழ் அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்தியுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்ததாக பிரதி மன்றாடியார் நாயகம் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

இந்தநிலையில் 10ஆவது சந்தேக நபரான சமன் ரட்நாயக்கவும் 8 ஆவது சந்தேக நபருமான முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும், அவசர கொள்வனவுச் செயலியைப் பயன்படுத்தி, போலி மருந்துப் பற்றாக்குறையை அமைச்சரவைப் பத்திரங்கள் மூலம் திட்டமிட்டமை, விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version