இந்தியா

சாந்தனின் மரணம்! பழ.நெடுமாறன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

Published

on

சாந்தனின் மரணம்! பழ.நெடுமாறன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

உடல்நலம் குன்றியிருக்கக் கூடிய சாந்தனை உடனடியாக விடுதலை செய்யுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு செவி சாய்க்க இந்திய அரசு மறுத்துவிட்டது என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

சாந்தனின் மறைவு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில்,உச்சநீதிமன்ற ஆணையிட்டபடி உடனே விடுதலை செய்திருந்தால், அவர் தமிழீழம் சென்று தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்திருப்பார். அவர்களின் அன்பான பராமரிப்பில் உயிர் பிழைத்திருக்கக் கூடும்.

இந்த சூழ்நிலையில் அரசு மருத்துவமனையில் சாந்தன் உயிர் துறந்த செய்தி அனைவரையும் மீளாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டது.

சாந்தனுக்கு நேர்ந்த கதி மற்ற மூவருக்கும் நேர்ந்துவிடக் கூடாது. எனவே, சிறப்பு முகாமில் இருக்கக் கூடிய மூவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு இந்திய அரசை வலியுறுத்துகிறேன்.

மேலும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தடா நீதிமன்றத்தினால் தூக்குத் தண்டனை விதிக்கப் பெற்று பின்னர், உச்ச நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனையாக்கப்பட்டு 31 ஆண்டு காலமாக இருண்ட சிறையில் வாடிய சாந்தன், அதே உச்ச நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டும்கூட சிறப்பு முகாம் என்னும் சிறையில் அடைக்கப்பட்டார்.

தனக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாத ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்டு, 31 ஆண்டுகள் சிறையில் சொல்லொண்ணாத வேதனைகளுக்கு ஆளாகி இறுதியில் மறைந்து போன சாந்தன் அவர்களுக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவருடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறேன் என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version