இலங்கை

அவுஸ்திரேலிய பெட்ரோலிய நிறுவனத்தினால் இலங்கையில் எரிபொருள் நிலையங்கள்

Published

on

அவுஸ்திரேலிய பெட்ரோலிய நிறுவனத்தினால் இலங்கையில் எரிபொருள் நிலையங்கள்

இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுடன் அவுஸ்திரேலியாவின் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனமான யுனைடெட் பெட்ரோலியம் உள்ளூர் சந்தையில் பெற்றோலிய பொருட்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுலக்க்ஷனா ஜயவர்தன மற்றும் யுனைடெட் பெட்ரோலியம் அவுஸ்திரேலியா சார்பாக அதன் நிறுவனத்தின் உரிமையாளர் என்ற வகையில் எடி ஹேர்ஸ் (Eddie Hirsch) ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான பெட்ரோலிய சில்லறை விற்பனையாளர் மற்றும் இறக்குமதியாளருக்கு இலங்கை முழுவதும் 150 எரிபொருள் நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 50 புதிய எரிபொருள் நிலையங்களை நிர்மாணிப்பதற்கான உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி அவுஸ்திரேலிய நிறுவனமானது இலங்கையில் ‘யுனைடெட் பெட்ரோலியம் லங்கா பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை இணைத்துக்கொண்டது.

நாட்டிற்குள் பெட்ரோலிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, முன்னாள் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CEYPETCO) நிர்வாக சபை உறுப்பினர் கலாநிதி பிரபாத் சமரசிங்க நிறுவனத்தின் பணிப்பாளராகவும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியா முழுவதும் 500இற்கும் மேற்பட்ட எரிபொருள் நிலையங்களை வைத்திருக்கும் அவுஸ்திரேலிய நிறுவனத்தின் சில்லறை பெட்ரோலியத்தை அவுஸ்திரேலியாவிற்கு வெளியே விரிவுபடுத்துவதற்கான முதல் விரிவாக்கத்தை இது குறிப்பதாக அமைகின்றது.

Exit mobile version