இலங்கை

அரச வங்கி வாடிக்கையாளர்கள் தொடர்பில் அறிவிப்பு

Published

on

அரச வங்கிகளில் கடன் பெற்றுக் கொண்டுள்ளோரிடமிருந்து அதனை அறவிட முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் வங்கி வாடிக்கையாளர்களில் நெத்தலி, பாறை மீன் என வகை பிரித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்பதை எதிர்க்கட்சித் தலைவர் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச வங்கிகளில் கோடிக்கணக்கான ரூபாய்களை கடனாக பெற்றுக் கொண்டோரிடமிருந்து அதனை அற விடுவதில் அரச வங்கிகள் கவனம் செலுத்துவதில்லை என்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் குற்றச்சாட்டுக்கு நாடாளுமன்றத்தில் வைத்து நேற்றைய தினம் பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அரச வங்கிகளினால் வழங்கப்பட்டுள்ள கடன்களை அறவிடுவதற்கு உரிய முறைகள் பின்பற்றப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை எதிர்க்கட்சித் தலைவருக்கு நாம் தெரிவிக்க விரும்புகிறோம். அது தொடர்பில் நாம் பல தடவைகள் தெரிவித்தும் அது எதிர்க்கட்சித் தலைவருக்கு புரியாமல் உள்ளது.

அதேவேளை, அவர் கோருவது போன்று அவ்வாறு கடன் பெறுபவர்களின் தகவல்களை பகிரங்கப்படுத்துவதில்லை என்ற சம்பிரதாயம் வங்கிகளுக்கு காணப்படுகிறது. இரகசியத் தன்மையை பாதுகாப்பதற்கு வங்கிகள் கடமைப்பட்டுள்ளன. அது முழு வங்கி கட்டமைப்பின் பாதுகாப்புக்கு உட்பட்ட விடயமாகும்.

அதேவேளை பாரியளவில் கடன் பெற்றுக் கொண்டோரிடமிருந்து அதனை அறவிடும் நடவடிக்கைகளுக்கு வங்கிகள் முன்னுரிமையளித்து செயற்படுகின்றன என்பதையும் குறிப்பிட வேண்டும். நாட்டில் நீதி கட்டமைப்பு ஒன்றுள்ளது. அத்துடன் வங்கி சம்பிரதாயங்கள், வங்கி முறைமைகள் என பல நியதிகள் காணப்படுகின்றன.

அதனைப் பின்பற்றியே நாம் செயற்பட வேண்டியுள்ளது. அந்த வகையில் வங்கிகளில் அனைவருக்கும் பொதுவான நியதிகளே கடைப்பிடிக்கப்படுவதுடன் எவருக்கும் சிறப்பு நிவாரணங்கள், சலுகைகள் வழங்கப்படுவதில்லை இதனை எதிர்க்கட்சித் தலைவர் உணர்ந்து கொள்ள வேண்டும். அரச வங்கிகளில் 5 கோடி 75 இலட்சம் ரூபாவை மக்கள் வைப்பிலிட்டுள்ளனர்.

அவ்வாறான வாடிக்கையாளர்களில் நூற்றுக்கு அறுபது வீதமானோர் ஐயாயிரம் ரூபாவுக்கு குறைவான சிறிய தொகைகளையே வைப்பிலிட்டுள்ளனர்.

அவர்களை பாதுகாக்க வேண்டியது எமது பொறுப்பு. அதற்கு அடுத்ததாகவே சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படுகிறது. அந்த வகையில் வங்கி கட்டமைப்பை பாதுகாத்து தொழில் முயற்சியாளர்களையும் பாதுகாக்கும் வகையிலேயே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version