இலங்கை

இலங்கை நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு மிரட்டல் விடுப்பதாக முறைப்பாடு

Published

on

இலங்கை நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு மிரட்டல் விடுப்பதாக முறைப்பாடு

மோசடி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சுகேஸ் சந்திரசேகர், தம்மை துன்புறுத்துவதாகவும், சிறையில் இருந்து மிரட்டல் விடுப்பதாகவும் இலங்கை நடிகை ஜெக்குலின் பெர்னாண்டஸ் டெல்லி பொலிஸ் ஆணையர் சஞ்சய் அரோராவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

சட்டத்தின் ஆட்சி மற்றும் இந்திய ‘நீதித்துறை அமைப்பின்’ புனிதத்தன்மைக்கு நீண்ட கால தாக்கங்களைக் கொண்ட ஒரு வழக்கில் கவனக்குறைவினால் சிக்கிக்கொண்ட ஒரு பொறுப்புள்ள குடிமகளாக தாம் இந்த முறைப்பாட்டை செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் சிறப்புப் பிரிவினால் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கில் அரசத்தரப்பு சாட்சியாக உள்ள நிலையில் உளவியல் ரீதியான அழுத்தங்கள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட மிரட்டல்களுக்கு மத்தியில் இந்த முறைப்பாட்டை செய்வதாக ஜாக்குலின் தெரிவித்துள்ளார்.

சுகேஸ் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒருவர், மண்டோலி சிறையில் இருந்தவாறு அச்சுறுத்தல் விடுத்து ஜாக்குலின் தனது அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் மூலமாக பொலிஸ் ஆணையரிடம் முறையிட்டுள்ளார்

இந்த நடவடிக்கைகள் தனது தனிப்பட்ட உரிமைகளை மட்டும் பாதிக்கவில்லை அவை இந்திய நீதி அமைப்பின் இதயத்தில் தாக்குகின்றன. அத்துடன் சட்ட நிறுவனங்களின் நம்பகத்தன்மையையும், செயல்திறனையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளதாக நடிகை கூறியுள்ளார்.

சுகேஸ் உடன் தொடர்புடைய 200 கோடி ரூபாய் பணமோசடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்கு தொடர்பாக டெல்லி பொலிஸ் பொருளாதார குற்றப்பிரிவு விசாரித்து வரும் வழக்கில் ஜாக்குலின் அரசத்தரப்பு சாட்சியாக உள்ளார்.

இதற்கு முன்னதாக சுகேஸ் சந்திரசேகரிடம் இருந்து பல கோடி ரூபாய் பெறுமதியான பரிசுப்பொருட்களை ஜாக்குலின் பெற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையிலேயே அவர் அரச தரப்பு சாட்சியாக மாறியுள்ளார்.

Exit mobile version