இலங்கை

தமிழர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Published

on

தமிழர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்ரகுமாரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் இலங்கையில் தேசிய சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட தருணத்தில் தமிழர்கள் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டு கரிநாள் போராட்டம் ஒன்றை நடத்தி இருந்தனர்.

தமிழர்களின் இந்த போராட்டத்தில் அரசாங்கம் அடக்குமுறைக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு தமிழர்களின் போராட்டத்தை அடக்கி, தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையளர் வோல்கர் டர்க்கிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 4ம் திகதி இலங்கையின் 76 வது சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது பாதுகாப்பு படையினர் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ருத்ரகுமாரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இலங்கை தொடர்பான வாய்மொழி மூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் இரண்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதான தமிழ் அரசியல் கட்சியான இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தாக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகத்தை மேற்கொண்டு போராட்டக்காரர்களை கலைக்க முயற்சித்தனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இந்த போராட்டத்துடன் தொடர்புடைய ஐந்து பல்கலைக்கழக மாணவர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறான தாக்குதல்கள் அடக்குமுறைகளை தடுக்கவும் தாக்குதல் மேற்கொண்டவர்களை தண்டிக்கவும் ஐக்கிய நாடுகள் அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது.

Exit mobile version