அரசியல்

அரசியலில் களத்தை கைவிட ஆர்வம் காட்டும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Published

on

அரசியலில் களத்தை கைவிட ஆர்வம் காட்டும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

அரசியல் செயற்பாடுகளில் இருந்து விலகிக் கொள்வது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் அவ்வாறான மனோ நிலையில் இருப்பதாக குறித்த தகவல் வட்டாரங்களில் இருந்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் பல்வேறு பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கான பொருளாதார வசதி அவர்களிடம் இல்லை என்று கூறப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்படாமையும் அவர்களை பொருளாதார ரீதியாக கடுமையாக பாதித்துள்ளது.

கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டு ​கோடி ரூபா பெறுமதியான சுங்கத் தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரத்தை மூன்றாம் தரப்புக்கு விற்பனை செய்வதன் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும் பொருளாதார நன்மைகளைப் பெற்றிருந்தனர்.

மேலும், வாகன அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால் தேர்தல் செலவுக்கான பணத்தை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனினும், நாட்டின் பொருளாதார நிலைமை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான பண ஒதுக்கீட்டை நிதியமைச்சு தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

அதே நேரம், ​​நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதிப்பத்திரம் வழங்கும் விடயம் தற்போதைய சூழ்நிலையில் சாத்தியப்படப் போவதில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

இவ்வாறான நிலையில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களில் கணிசமானவர்கள் அடுத்த தேர்தலுடன் அரசியல் களத்தை விட்டும் ஒதுங்கிக் கொள்ளும் மனோ நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

Exit mobile version