இலங்கை
பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அடிப்படை உரிமைகளுக்கு முரணானது
நாடாளுமன்றில் அரசாங்கம் சமர்ப்பித்துள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் ஒவ்வோர் எழுத்தும் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் உறுப்புரைகளுக்கு முரணானது என தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் அமைப்பின் உறுப்பினர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்தில் பல திருத்தங்களை உள்ளடக்கியதாக நீதி அமைச்சர் எடுத்தியம்ப முற்பட்டார்.
எனினும் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பித்த சட்டமூலத்துடன் தொடர்புடைய 2023 செப்டெம்பர் 15 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலில் பாகம் இரண்டுக்கான குறைநிரப்பி என்றே இருக்கின்றது.
எனவே அமைச்சர் சபாபீடத்தில் பழைய தட்டையே சமர்ப்பித்துள்ளதாக வட்டகல ஊடகவியளாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் இந்த வர்த்தமானி நாடாளுமன்றத்தின் ஒழுங்குப் பத்திரத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இதே சட்டம் ஏப்ரல் மாதத்தில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, மீண்டும் திருத்தப்பட்டு, செப்டெம்பர் மாதத்தில் கொண்டுவரப்பட்டது. அது தற்போது மூன்றாவது தடவையாகவும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஓர் எழுத்தையேனும் திருத்தாமல் செப்டெம்பர் மாதத்தில் சமர்ப்பித்த சட்டமூலத்தையே மீண்டும் கொண்டுவந்திருக்கிறார்கள். அதனால் மக்களை தவறாக வழிநடாத்த செயலாற்ற வேண்டாமென தாம் அரசாங்கத்தை எச்சரிப்பதாக சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
இந்த சட்டம் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்திற்கு முரணானது. அரசியலமைப்பின் மூன்றாவது மற்றும் நான்காவது உறுப்புரைகளில் உறுதிசெய்யப்பட்டுள்ள மக்களின் இறைமைத் தத்துவத்திற்கு முரணானது.
இந்தச் சட்டத்தின் உள்ளடக்கம் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்திற்கும் மக்களின் இறைமைத் தத்துவத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற இரண்டு உறுப்புரைகளின் ஒவ்வோர் எழுத்திற்கும் முரணானதாகும்.
அதைப்போலவே சமர்ப்பித்துள்ள பிரிவுகளுக்குள்ளே பயங்கரவாதம் என்பதற்கான பொருள்கோடல் வழங்கப்படவில்லை. எனினும் பயங்கரவாத தவறுகள் பற்றி பல உதாரணங்கள் தரப்பட்டுள்ளன.
பயங்கரவாத தவறு என்பதற்கான பல விரிவான தெளிவுபடுத்தல்கள் தரப்பட்டுள்ளன. குறிப்பாக 19 ஆவது பிரிவின் பொருள்கோடல் மூலமாக பிடியாணையின்றி கைதுசெய்வதற்கான அதிகாரம் எந்தவொரு பொலிஸ் உத்தியோகத்தருக்கும் எந்தவொரு முப்படை உத்தியோகத்தருக்கும் கரையோரப் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
அதன் மூலமாக மின்சாரசபை ஊழியர்கள் அண்மையில் முன்னெடுத்த ஆர்ப்பாட்டங்கள் போன்ற, வேலைத்தளங்களில்கூட முன்னெடுக்கின்ற நியாயமான ஆர்ப்பாட்டங்களுக்கும் இடமளிக்காதிருக்கவே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
அரசாங்கத்திற்கு எதிராக குரல்கொடுப்பவர்களைக் கைதுசெய்து தடுத்துவைத்தலுடன் ஏற்புடைய ஏற்பாடுகள் இதில் இருக்கின்றன. நாட்டின் ஜனாதிபதிக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தடுத்துவைப்பதற்கான கட்டளையை விடுக்கின்ற வர்த்தமானி அறிவித்தல் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படவேண்டுமென எந்தவோர் இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.
புனர்வாழ்வு அதிகரசபை சட்டம், சமூக வலைத்தளங்களை அடக்குவதற்கான சட்டம், ஒளிபரப்பு அதிகாரசபை சட்டம் போன்ற சட்டங்களைக் கொண்டுவர முயற்சிக்கும் அரசாங்கம் அந்தச் சட்டங்களின் ஊடாக அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களைச் செய்கின்ற, நியாயமான மக்கள் எதிர்ப்புகள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடுவதற்காக இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.
ரணில், ராஜபக்ச குழு, இந்த தேர்தல் வருடத்தில் மேலும் ஒருநாளாவது அதிகாரத்தில் இருப்பதற்காகவே இந்த சட்டங்களை ஆக்கி வருகின்றது.
இந்தநிலையில் தேசிய மக்கள் சக்தி என்ற வகையில் இந்த பயணத்தைத் தொடர நாங்கள் இடமளிக்கமாட்டோம் என்று சுனில் வட்டகல குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சட்டங்களை அங்கீகரித்து, அது நோயாளர்களின் உயிர்களை ஆபத்தில் வீழ்த்திய கெஹெலிய ரம்புக்வெல்ல அப்பாவி எனக் கூறுவதற்காகவே முயற்சி எடுக்கப்படுகின்றது.
எனவே இந்த சட்டத்திற்கு எதிராக தாங்கள் உயர்நீதிமன்றத்திற்கு பல மனுக்களை சமர்ப்பிக்கவுள்ளதாகவும், இந்த படுமோசமான சட்டத்தை தோற்கடிப்பதற்காக நாட்டின் எல்லா இடங்களிலம் முனைந்து செயற்படப்போவதாகவும் தேசிய மக்கள் முன்னணி சட்டத்தரணிகள் அமைப்பின் சட்டத்தரணி சுனில் வட்டகல குறிப்பிட்டுள்ளார்.