இலங்கை

அகிலத் திருநாயகியை கௌரவித்த ஜனாதிபதி

Published

on

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 22 ஆவது ‘மூத்தோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப்’ போட்டியில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்ற அகிலத் திருநாயகியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேரில் அழைத்துப் பாராட்டி கௌரவித்து மதிப்பளித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (06.1.2024) நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, வயது என்பது வெறும் இலக்கம் மட்டுமே என்பதை நிரூபித்து அகிலத்தை வென்ற அகிலத் திருநாயகிக்கு ஜனாதிபதி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வடக்கு மாகாணத்தில் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்காக முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்களுக்கு ஆதரவையும், ஆலோசனைகளையும் வழங்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன்போது இவருக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்குமாறும் வடக்கு ஆளுநருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற சிரேஷ்ட பிரஜைகளுக்கான தடகளப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றிருந்த திருமதி அகிலத் திருநாயகி (வயது 72) இரண்டு தங்கப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த இவர், 1,500 மற்றும் 5000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

800 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.

அப்போட்டிக்கு முன்னர் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய 22 ஆவது ஆசிய சிரேஷ்ட பிரஜைகளுக்கான போட்டியில் பங்கேற்ற இவர், அதில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றார்.

இவர் ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version