இலங்கை

யாழில் உச்ச கட்டத்தில் டெங்கு தொற்று

Published

on

தொற்று நோயானது உச்ச கட்டத்தை அடைந்த பின்னரே படிப்படியாக குறைவடையும் எனவே எதிர்வரும் காலத்திலாவது டெங்கு நோயை மழை காலம் ஆரம்பமாகும் போது கட்டுப்படுத்துவதற்கு முற்பட வேண்டும் என சமுதாய வைத்திய நிபுணரும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதியுமான சுரேந்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

டெங்கு கட்டுப்படுத்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், தற்போதைய காலப்பகுதியில் டெங்கு மற்றும் சுவாசம் சம்பந்தமான நோய்கள் மக்கள் மத்தியில் பரவி வருகின்றது.

முக்கியமாக டெங்கு நோய் யாழ்ப்பாணத்தை அண்மித்த பகுதிகளில் கூடுதலான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. டெங்கு எமது பகுதியில் மழை காலப்பகுதியில் வருடா வருடம் தாக்கத்தை ஏற்படுத்துவது தொடர்ந்து நடைபெறுகின்ற விடயம்.

இதனை சரியான முறையில் கையாளும் போது டெங்கு ஏற்படாமல் ஆரம்பத்திலேயே தடுக்க முடியும். இது எங்களுடைய அன்றாட பழக்க வழக்கத்தில் தங்கி இருக்கின்றது.

எனவே தேவையற்ற பொலித்தீன் பாவனை, பிளாஸ்டிக் பாவனை, தண்ணீர் தேங்கி நிற்கக்கூடிய சிரட்டைகளில் இருந்து டயர்கள் மற்றும் ஏனைய விடயங்களை கிரமமாக மழை காலத்திற்கு முதல் அகற்ற வேண்டும்.

குறிப்பாக தற்போது இந்த டெங்கு நோயானது உச்சக்கட்டத்தை தாண்டி உள்ளது. ஆனால் நோய் உச்சக்கட்டத்திற்கு போன பின்னர் தான் டெங்கை கட்டுப்படுத்த வேண்டும் என முனைகின்றோம்.

உண்மையாக இதனை கட்டுப்படுத்த வேண்டுமாக இருந்தால் மழைக்காலத்துக்கு முதலே இந்த வேலை திட்டத்தினை மேற்கொள்ள வேண்டும். ஆனால் டெங்கு நோய் உச்சத்தை தொட்ட பின்னர் தான் இப்போது டெங்கை கட்டுப்படுத்த முனைகின்றோம்.

ஒரு தொற்று நோயானது உச்ச கட்டத்தை அடைந்த பின்னரே படிப்படியாக குறைவடையும் எனவே எதிர்வரும் காலத்திலாவது டெங்கு நோயை மழை காலம் ஆரம்பமாகும் போது கட்டுப்படுத்துவதற்கு முற்பட வேண்டுமென்று அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version