இந்தியா
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இலங்கையர் தொடர்பில் நடவடிக்கை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இலங்கையர் தொடர்பில் நடவடிக்கை
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களில் ஒருவரான முருகன் என்பவரை இங்கிலாந்துக்கு நாடு கடத்த முடியாது என மத்திய அரசு, சென்னை மேல்நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
எனினும் அவரை அவரது தாய்நாடான இலங்கைக்கு நாடு கடத்தமுடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்ட முருகன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று (19.12.2023) இடம்பெற்றபோது, வெளியுறவு அமைச்சகத்தின் வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அதிகாரி இந்த விடயத்தை சமர்ப்பித்தார்.
இந்நிலையில் இந்தியாவிலிருந்து வெளியேறி இங்கிலாந்து செல்வதற்கான பயண ஆவணங்களை முருகன் கோரியிருந்தார். ஆனால் அத்தகைய அனுமதி அல்லது வெளியேற உத்தரவை வழங்க முடியாது என இலங்கை உயர்ஸ்தானிகரகத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அவரது ஆவணங்களை அனுப்பியுள்ளது.
இந்தநிலையில் இலங்கை உயர்ஸ்தானிகரகம், மனுதாரருக்கு கடவுச்சீட்டு அல்லது பயண ஆவணங்களை வழங்கினால் மட்டுமே, இந்திய வெளியுறவு அமைச்சு அடுத்த பணிகளை தொடரமுடியும் என தெரிவிக்கப்படுகிறது.
தற்போது திருச்சியில் உள்ள வெளிநாட்டவர்களுக்கான சிறப்பு முகாமில் முருகன் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக அவர் இங்கிலாந்தில் உள்ள தனது மகளுடன் வெளிநாடு செல்ல அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார்.
இந்தநிலையில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக முருகன் சென்னைக்கு வரும்போதெல்லாம் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்து, முருகனின் இந்த மனுவை சென்னை மேல்நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.