இலங்கை

யாழில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்

Published

on

யாழில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்

யாரேனும் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு டெங்கு நோய் அறிகுறி ஏற்பட்டால் அருகில் உள்ள அரச வைத்தியசாலைகளில் குருதிப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என வடமாகாண சுகாதார சேவைகள்பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ள நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று(16.12.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தினசரி நூற்றுக்கணக்கானோர் டெங்கு நோய்க்கான சிகிச்சையை பெற்று வருகின்றனர். இன்றும் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.மாவட்டத்தில் போதனா வைத்தியசாலைக்கு அப்பால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை, ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைகளிலும் டெங்கு நோயாளிகளை பராமரிக்க விடுதிகள் காணப்படுகிறது.

அதேவேளை அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை, கோப்பாய் பிரதேச வைத்தியசாலை, சண்டிலிப்பாய் பிரதேச வைத்தியசாலைகளிலும் டெங்கு நோய் அறிகுறி தொடர்பிலான இரத்த பரிசோதனைகளை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த பொது வைத்திய நிபுணர் ரி.பேரானந்தராஜா,

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்து தலைவலி, வாந்தி, வயிற்றோட்டம், மூட்டு நோ போன்ற நோய் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரச வைத்தியசாலையை நாடுவது நல்லது என கூறியுள்ளார்.

தற்போதைய காலப்பகுதியில் டெங்கு நோய்க்கு மேலதிகமாக வேறு நோய்களும் பரவுகிறது என தெரிவித்த பொது வைத்திய நிபுணர் எஸ்.சிவன்சுதன், காய்ச்சல் தொடர்ந்து இருந்தால் மருத்துவ ஆலோசனையை பெற்று என்ன வகையான தொற்று என்பதை கண்டறிந்து சிகிச்சையை பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version