அரசியல்

நாட்டின் அபிவிருத்திக்காக கல்வியை பயன்படுத்த புதிய திட்டம்

Published

on

நாட்டின் அபிவிருத்திக்காக கல்வியை பயன்படுத்த புதிய திட்டம்

பல்கலைக்கழகக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி கல்வியை நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்தும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய வணிக கற்கைகள் நிறுவகத்தின் (NSBM Green University) 2023 பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை அபிவிருத்திக்கு இட்டுச் செல்வதற்கு அறிவாற்றல் மிக்க மனித வளம் தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறும் அனைவருக்கும் தொழில் கிடைக்கும் வகையில் பல்கலைக்கழக கல்வி முறை மாற்றியமைக்கப்பட வேண்டும்.

இன்று அரச பல்கலைக்கழகங்களில் இணையும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

நிதி ஒதுக்குவதில் உள்ள சிக்கல்தான் அதற்குக் காரணம். ஆனால் மற்ற நாடுகள் இந்தப் பிரச்சினையை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரகடனமும், “அனைவருக்கும் கல்வியை பெறும் உரிமை வழங்கப்பட வேண்டும்” என்று கூறுகிறது.

அதன்படி, ஒவ்வொரு நாட்டிலும் இதற்காக அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டுள்ளன. இலங்கை என்ற வகையில் நாம் இப்போது அந்த பணிக்கு செல்ல தயாராக உள்ளது.

அதற்கமைய இந்நாட்டு பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையை இரண்டு அல்லது மூன்று மடங்கினால் அதிகரிக்க நாம் எதிர்பார்க்கிறோம்.

அதனால் புதிய தொழில்நுட்ப கல்வியுடன் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் பட்டங்களை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைக்கும்.

இலங்கையை பல்கலைக்கழங்களுக்கான கேந்திர நிலையமாக மாற்றியமைக்க வேண்டும். 2030 ஆம் ஆண்டளவில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆங்கில அறிவை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க எதிர்பார்க்கிறோம்.

அதேபோல் ஏனைய மொழி அறிவிலும் தன்னிறைவான மாணவச் சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும்.

அதேபோல் தொழில் பயிற்சி நிறுவனங்களை ஒன்றிணைத்து தொழில் பயிற்சி பல்கலைக்கழங்களை நிறுவ எதிர்பார்ப்பதோடு, தொழில் வாய்ப்புக்களை இலக்கு வைத்த புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தவும் எதிர்பார்க்கிறோம்.

அதற்கு தனியார் வர்த்தகச் சங்கமும் ஒத்துழைப்பு வழங்க முன்வந்திருப்பதால் அடுத்த வருடத்திலிருந்து இத்திட்டத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.

அதனையடுத்து நாட்டின் கல்வித்திட்டத்தில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த அவசியமான சட்டங்களை உருவாக்க எதிர்பார்ப்பதோடு, அதற்கமைய பல்கலைக்கழக கல்வி மற்றும் தொழில் பயிற்சிக் கல்வியை நாட்டின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்திகொள்ளும் வேலைத்திட்டம் அடுத்த வருடத்திலிருந்து ஆரம்பிக்கவுள்ளோம்.

நாட்டின் முன்னேற்றத்திற்கு அறிவு அவசியம். அதற்கான கல்வி முறைமையை உருவாக்க வேண்டும். தற்போது நாம் இடைநிலை வருமானம் ஈட்டும் நாடு.

நாம் தொடர்ந்தும் இந்நிலையில் இருக்க வேண்டுமா? உயர் வருமானப் பொருளாதாரமாக மாற்றமடைய வேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டும்.

நாம் அனைவரும் அந்த பயணத்தை தொடர வேண்டும். அதற்குரிய மனித வளத்தை கட்டமைப்பதற்கு தகுந்த கல்வியை வழங்க வேண்டும்.

Exit mobile version