இலங்கை

யாழில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது

Published

on

யாழில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது

யாழ்ப்பாணம்– தெல்லிப்பழையில் கடந்த 4ஆம் திகதி இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களை நேற்று(06.12.2023) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முல்லைத்தீவு- வள்ளிபுனம், முத்தையன் பகுதிகளைச் சேர்ந்த இருவரும் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்பு பிரிவினரே மூவரையும் கிளிநொச்சியில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்துள்ளனர்.

தாக்குதலுக்குப் பயன்படுத்திய ஹயஸ் வாகனம் மற்றும் இரண்டு வாள்களும் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன என்றும் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் தேடப்பட்டு வருகின்றனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெல்லிப்பழை பகுதியில் வைத்து ஒருவர் மீது 6 மாதங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பழிவாங்கும் நோக்குடன் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும், ஹயஸ் வாகனத்தின் டயர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில் அந்த டயர் மாற்றப்பட்டதுடன் சூடு பட்ட அடையாளங்களை மறைக்க ஏனைய பாகங்களை மாற்றவும் முயன்றுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் தலைமறைவாகியுள்ள மூவரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும், கைது செய்யப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கைக்கான நாளை நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version