இலங்கை

நல்லிணக்கத்தை விரும்பாத இலங்கை அரசாங்கம்

Published

on

நல்லிணக்கத்தை விரும்பாத இலங்கை அரசாங்கம்

மாவீரர் நினைவேந்தலை மேற்கொண்டவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவதன் மூலம் இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்தை விரும்பவில்லை என்பதே தெளிவாகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(05.12.2023) இடம்பெற்ற அமர்வில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மீண்டும் ஒருமுறை நினைவேந்தலை செய்வதை தடுக்கும் வகையிலேயே பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் மற்றும் அவரது மகன் ஆகியோர் மாவீரர் துயிலும் இல்லமொன்றுக்கு சென்றிருந்தனர்.

சிவப்பு மற்றும் மஞ்சள் கொடிகளை கொண்டுசெல்வதற்காக வாகனமொன்றையும் அமைப்பாளர் வாடகைக்கு அமர்த்திருந்தார்.

தமது கட்சியின் அமைப்பாளர் நினைவுகூரல் நிகழ்வில் கூட பங்கேற்கவில்லை. எனவும் மீளத் திரும்பிக்கொண்டிருக்கும் போது இடைநடுவே, சோதனைச் சாவடியில் அவர் நிறுத்தப்பட்டு, சோதனையிட்ட பின்னர் வாகனத்தை கைப்பற்றுவதற்கு பொலிஸார் தீர்மானித்தனர்.

சிவப்பு மஞ்சள் கொடியை வைத்திருந்ததன் காரணமாக சாரதியையும் பொலிஸார் கைதுசெய்தனர் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.

சிவப்பு மற்றும் மஞ்சள் கொடிகள் என்பது தமிழ் தேசியத்திற்கான நிறங்களாகும் எனவும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்ற எனது கட்சியின் கொடியிலும் சிவப்பு மஞ்சள் உள்ளது.

பெடரல் கட்சியின் கொடியிலும் சிவப்பு மஞ்சள் உள்ளது என கூறியுள்ளது. போர்க் குற்றவாளியான பிள்ளையானின் கட்சிக் கொடியிலும் சிவப்பு மஞ்சள் உள்ளது.

எனினும் தமது கட்சியின் அமைப்பாளர் மற்றும் அவரது மகன் ஆகியோர் கைதுசெய்யப்படவில்லை என்ற போதிலும் சாரதி கைதுசெய்யப்பட்டதால், பொலிஸாருடன் சென்றிருந்தனர்.

நினைவேந்தல் நிகழ்வை செய்ய வேண்டும் என தமது அமைப்பாளரின் மகன் விரும்பினார் எனவும் அது குறித்து பொலிஸாரிடம் கேட்டுக்கொண்டார்.

வெளியே சென்று தீபம் ஏற்றுமாறு பொலிஸார் கூறியுள்ளதை அடுத்து வெளியே சென்று தீபம் ஏற்றிய போது அமைப்பாளரையும் அவரது மகனையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த மூவரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சர்வதேசத்திற்கு கூறிய விடயத்திற்கு எதிராக நினைவுகூரலை செய்யும் போது நீங்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்துகின்றீர்கள்.

வெறுமனே நினைவுகூரலை செய்தால், அதனை விசாரணை செய்ய வேண்டுமாயின் வேறு சட்டங்களை பயன்படுத்தியிருக்க முடியும் என்ற போதிலும் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தியன் மூலம் மக்களை அச்சுறுத்த முற்படுகின்றீர்கள்.

அவர்களை அச்சமூட்டி, நினைவேந்தலை கைவிடுவதை உறுதி செய்ய முனைகின்றீர்கள் எனவும் உங்களின் நோக்கம் என்பது நல்லிணக்கம் அல்ல.

உங்களின் நோக்கம் என்பது, தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவது அல்ல. அடுத்த தடவை மக்கள் தமது செயற்பாடுகளை சுயமாக கட்டுப்படுத்தி, நினைவேந்தலை செய்யாமல் தடுப்பதே உங்களின் நோக்கமாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version