இலங்கை

சஜித்துக்கு எதிராக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு

Published

on

சஜித்துக்கு எதிராக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் கருத்தைக் கேட்காமல் தனது சுய கருத்தை மாத்திரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததற்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குழுக் கூட்டத்தின் போதே இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையில் நாடாளுமன்றில் கூடியது.

“எதிர்க்கட்சித் தலைவர் மீது அரசாங்கம் பெரும் சுமையை சுமத்தி வருகிறது. அவர் எங்கள் தலைவர். வேறு யாரும் இல்லை” என கூட்டத்தின் தொடக்கத்திலேயே கட்சியின் பொதுச்செயலாளர் கூறியதையடுத்து, உறுப்பினர்களிடமிருந்து எதிர்ப்பு வெளியாகியுள்ளது.

இதன்போது “சஜித் பிரேமதாச தனக்கு என்ன வேண்டும், வேண்டாம் என பேசுவதாலேயே இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளது” என நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் குற்றம் சுமத்தியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத் தலைவர்களுடன் முரண்படுவது நல்லதென்றாலும், சனத் நிஷாந்த, பிரசன்ன ரணவீர போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முரண்படுவது நல்லதல்ல எனவும் கட்சியின் உறுப்பினர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் பேசும் போது, விளம்பரத்தை தேடக் கூடாது என குற்றம் சுமத்தியுள்ளனர்.

Exit mobile version